நிதி ஆயோக் அதிகாரி தீபக் பக்லா
புதுடெல்லி: ‘லேர்ன் நெக்ஸ்ட்’ என்ற தலைப்பில் தனியார் டி.வி. ஒன்று நடத்திய கருத்தரங்கில், நிதி ஆயோக் அதிகாரியும், அடல் புதுமை கண்டுபிடிப்பு திட்ட இயக்குநருமான தீபக் பக்லா கலந்து கொண்டார்.
அவர் ‘வளர்ந்த இந்தியா 2047: இந்தியக் கல்வியின் எதிர்காலம் தொழில் முனைவோர் திறனா ?’ என்ற தலைப்பில் பேசியதாவது: இந்தியாவின் கல்வி முறை உலகளவில் சிறந்து விளங்கக்கூடிய நபர்களை உருவாக்கியுள்ளது. சர்வதேச நிறுவனங்களில் தலைமைச் செயல் அதிகாரிகளாக செயல்படும் இந்தியர்களிடம், ஒரு வேலையைச் செய்து முடிக்கும் திறன் மற்றும் எந்தவொரு வழிகாட்டுதலும் இன்றிச் செயல்படும் திறன் என 2 விதமான திறன்கள் உள்ளன.
இந்தியாவின் கல்வி முறை, தேர்வு என்ற ஒரு கட்டமைப்பிலிருந்து புதுமை கண்டுபிடிப்புகள், தொழில் முனைவோர் திறன் மற்றும் தகவமைப்புத் திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ஒரு பெரிய மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. புதுமை கண்டுபிடிப்புகளின் ஊக்கத்தால், தொழில் முனைவோரை இந்தியா அதிகளவில் உருவாக்கி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.