புதுடெல்லி: அமெரிக்கா, ஈரான் இடையிலான போர் காரணமாக, மார்ச் மாதத்தில் இந்தியாவின் டீசல் ஏற்றுமதி 20% அதிகரித்துள்ளது. அமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளது.
இதனால் கச்சா எண்ணெய் கப்பல்கள் போக்குவரத்து முடங்கி, கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருகிறது. இந்நிலையில், கச்சா எண்ணெய் விலைக்கும் சுத்திகரிக்கப்பட்ட டீசல் விலைக்கும் இடையே அதிகரித்து வரும் இடைவெளி காரணமாக, மார்ச் மாதத்தில் இந்தியாவின் டீசல் ஏற்றுமதி முந்தைய மாதத்தை விட 20% உயர்ந்துள்ளது. இருப்பினும், கப்பல் போக்குவரத்து தரவுகளின்படி, சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலியப் பொருட்களின் மொத்த ஏற்றுமதி 8% சரிந்துள்ளது.
பொதுவாக, சுத்திகரிப்பு நிறுவனங்கள் லாபகரமான ‘கிராக் ஸ்பிரட்' மற்றும் மார்ஜின்களைப் பயன்படுத்திக் கொள்ள தங்கள் உற்பத்தி கலவையை மாற்றியமைக்கின்றன. ‘கிராக் ஸ்பிரட்' என்பது கச்சா எண்ணெய் விலைக்கும் அதிலிருந்து பெறப்படும் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களின் விலைக்கும் இடையிலான வித்தியாசத்தைக் குறிக்கிறது.
‘மார்ஜின்' என்பது செலவுகள் மற்றும் செயல்பாட்டுத் திறனுக்குப் பிறகு சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஈட்டும் லாபத்தைக் குறிக்கிறது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்ட நிலையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், அதன் தாக்கம் பல்வேறு எரிபொருட்களில் மாறுபட்டுள்ளது.
டீசல் மற்றும் ஜெட் எரிபொருளுக்கான கிராக் ஸ்பிரட்கள் புதிய உச்சத்தை எட்டியுள்ளன. அதேநேரம் பெட்ரோலுக்கான விலை ஓரளவுக்கு நிலையாகவே உள்ளன. கப்பல்களைக் கண்காணிக்கும் ‘கெப்லர்' நிறுவனத்தின் தரவுகளின்படி, பிப்ரவரி மாதத்தில் 107.4 கோடி பீப்பாய்களாக இருந்த டீசல் ஏற்றுமதி, மார்ச் 1 முதல் 28 வரையிலான காலத்தில் 129 கோடி பீப்பாய்களை எட்டியுள்ளது. இதனிடையே, மார்ச் மாதத்தில் இந்தியாவின் பெட்ரோல் ஏற்றுமதி 33% குறைந்து 83.1 கோடி பீப்பாய்களாக வீழ்ச்சிஅடைந்தது.