சென்னை: கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்துவந்த நிலையில், இன்று (ஏப்.30) காலை 22 காரட் ஆபரணத் தங்கம் மாற்றமின்றி கிராம் ரூ.13,900-க்கு விற்பனையானது. இந்நிலையில், இன்று பிற்பகலில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,600 உயர்ந்தது.
சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை முதலீடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
இந்நிலையில், தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த 20 முதல் 24-ம் தேதி வரையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,080 என விலை குறைந்தது. கடந்த சனிக்கிழமை அன்று பவுனுக்கு ரூ.800, திங்கட்கிழமை அன்று பவுனுக்கு ரூ.240 என தங்கம் விலை உயர்ந்தது. பின்னர் ஏப்.28. 29 தேதிகளில் தொடர்ச்சியாக குறைந்தது.
இந்தச் சூழலில், இன்று (வியாழக்கிழமை) பிற்பகலில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,000-க்கும், பவுனுக்கு ரூ.1600 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,12,800-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.270-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.2,70,000-க்கும் விற்பனையாகிறது.
ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி:
ஈரான் - அமெரிக்கா இடையே உடன்பாடு எட்டப்படாத நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.95.04 என வரலாறு காணாத அளவில் வீழ்ச்சி கண்டுள்ளதும் தங்கம் விலை மாற்றத்தில் தாக்கம் செலுத்தியுள்ளது.
இதனிடையே, மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் இன்று காலையில் இருந்தே கடும் வீழ்ச்சி நிலவியது. மும்பை பங்குச் சந்தை வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் வரை வீழ்ச்சி கண்டது. எனினும், இன்றைய வர்த்தக நேர முடிவில், சென்செக்ஸ் 582.86 சரிந்து 76,913.50 எனவும், நிஃப்டி 180.10 புள்ளிகள் சரிந்து 23,997.55 எனவும் நிலை கொண்டிருந்தது.