சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் இன்று (ஜூன் 12) பவுனுக்கு ரூ.2,400 என உயர்ந்துள்ளது. இதேபோல் வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.5,000 என உயர்ந்துள்ளது.
சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.
கடந்த மாதம் (மே) தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. அதையடுத்து தங்கம் விலையில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சூழலில் சென்னையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.300 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,800-க்கும், பவுனுக்கு ரூ.2,400 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,10,400-க்கும் விற்பனையாகிறது. நேற்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,400 குறைந்திருந்த நிலையில் இன்று அப்படியே அது உயர்ந்துள்ளது கவனிக்கத்தக்கது.
24 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.2,616 என விலை உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,20,440-க்கும், 18 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.1,920 என விலை உயர்ந்து, ஒரு பவுன் ரூ.92,400-க்கும் விற்பனையாகிறது.
இதுபோல, வெள்ளி கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ரூ.265 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.2,65,000 ஆகவும் சந்தையில் விற்பனையாகிறது.