சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்.21) பவுனுக்கு ரூ.2,080 என உயர்ந்துள்ளது. இதே போல வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.20,000 அதிகரித்துள்ளது.
சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, உலக பங்குச் சந்தை முதலீடுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.
இந்தச் சூழலில், கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்தும் குறைந்தும் வருகிறது. உலக நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ரீதியான உறவு இதற்கு முக்கிய காரணம் என துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் பதற்றமும் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று தங்கம் விலை குறைந்திருந்த நிலையில், இன்று (பிப்.21) தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.260 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,680-க்கும், பவுனுக்கு ரூ.2,080 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,17,440-க்கும் விற்பனை ஆகிறது.
இதேபோல 24 காரட் சுத்த தங்கம் பவுனுக்கு ரூ.2,272 என உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,28,120-க்கு விற்பனை ஆகிறது. 18 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.1,680 என உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,00,480-க்கு விற்பனை ஆகிறது.
வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.290-க்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.20,000 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.2,90,000-க்கும் சந்தையில் விற்பனை ஆகிறது.