சென்னை: தொடர் சரிவுக்கு பிறகு சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 7) பவுனுக்கு ரூ.720 என உயர்ந்தது. இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி, எரிவாயு சிலிண்டரின் விலையேற்றத்துக்கு மத்தியில் தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, உலக பங்குச் சந்தை முதலீடுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.
இந்தச் சூழலில், தொடர்ச்சியாக தங்கம் விலை உயர்ந்தும் குறைந்தும் வருகிறது. உலக நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ரீதியான உறவு இதற்கு முக்கிய காரணம் என துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான போர் காரணமாக தங்கத்தின் விலையில் பெரிய அளவில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த போரினால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படும் சூழல் நிலவுவதாக தகவல்.
தங்கம் விலை மார்ச் 2-ம் தேதி பவுனுக்கு ரூ.920 என குறைந்தது. அதன் பின்னர் மார்ச் 3 - ரூ.1,560, மார்ச் 4 - ரூ.2,120, மார்ச் 5 - ரூ.640, மார்ச் 6 - ரூ.1,280 என விலை குறைந்தது. இந்த சூழலில் சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது.
இன்று (சனிக்கிழமை) காலை வர்த்தகம் தொடங்கியதும் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.15,050-க்கும், பவுனுக்கு ரூ.720 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,20,400-க்கும் விற்பனை ஆகிறது.
24 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.784 என விலை உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,31,344-க்கு விற்பனை ஆகிறது. 18 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.320 என விலை உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,04,560-க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.290-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.2,90,000-க்கும் விற்பனை ஆகிறது.