சென்னை: சென்னையில் இன்று (டிச.12) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியது. இன்று காலை தங்கம் பவுனுக்கு ரூ.1,600 என விலை உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.6,000 என உயர்ந்துள்ளது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால், தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.
சர்வதேச அளவில் முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளியில் அதிகளவில் முதலீடு செய்யத் தொடங்கி உள்ளனர். இதனால், இவற்றின் தேவை அதிகரித்து, விலை உயர்கிறது. விரைவில் பவுன் தங்கம் ரூ.1 லட்சத்தை தொடும் என்று கணிக்கப்படுகிறது. இந்த சூழலில் தங்கம் விலை இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
22 காரட் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,250-க்கும், பவுனுக்கு ரூ.1,600 உயர்ந்து ஒரு பவுன் ரூ.98,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் தங்கம் ஒரு பவுன் ரூ.1,06,912 மற்றும் 18 காரட் தங்கம் ஒரு பவுன் ரூ.81,840-க்கும் விற்பனை ஆகிறது.
வெள்ளி விலை: வெள்ளி விலை வரலாறு காணாத புதிய உச்சத்தைக் கண்டுள்ளது. அதன்படி இன்று, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.6-ம், கிலோவுக்கு ரூ.6,000 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.215-க்கும், ஒரு கிலோ ரூ.2,15,000-க்கும் விற்பனை ஆகிறது.
காரணம் என்ன? - அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தற்போது ரூ.90.37 ஆக கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. மேலும், சர்வதேச அளவில் தங்கம் மீதான முதலீடு அதிகரித்தும் புதிய உச்சத்துக்கு காரணம்.