புதுடெல்லி: மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இதுவரையில் 20% (இ20) எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலுக்கு உற்பத்தி வரி விலக்கு வழங்கப்பட்டுவந்தது.
இனி, 22%, 25%, 27% மற்றும் 30% (இ30) எத்தனால் கலந்த பெட்ரோலுக்கும் உற்பத்தி வரியிலிருந்து முற்றிலும் விலக்கு அளிக்கப்படும். இந்த நடவடிக்கையால் சந்தையில் உடனடியாக அதிக எத்தனால் கலந்த பெட்ரோல் அறிமுகமாகப் போகிறது என கருதத் தேவையில்லை.
எரிபொருள் கிடங்குகளில் பெட்ரோலுடன் எத்தனாலை கலப்பது ஒரு உற்பத்திச் செயல்பாடாகக் கருதப்படுவதால், அதற்கு உற்பத்தி வரி விதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதைத் தவிர்க்கவே இந்த விலக்கு ஒரு ஒழுங்குமுறைத் தேவையாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுதவிர, கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைத்து, உயிரி எரிபொருளின் பயன்பாட்டை அதிகரிக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆசிய போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.7.50 வரை உயர்ந்தன. இதிலிருந்து நுகர்வோரைப் பாதுகாக்க கடந்த மார்ச் மாதம் பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை லிட்டருக்கு ரூ.10 குறைக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.