வணிகம்

புதுச்சேரியில் உயர்கிறது மின் கட்டணம் - புதிய ‘சிலாப்’ விவரம் என்ன?

செய்திப்பிரிவு

புதுச்சேரி: புதுச்சேரியில் வீட்டு உபயோகத் துக்கான மின்கட்டணம் உயர் கிறது. இதற்காக, ஆண்டுதோறும் உயர்த்தும் வகையில், அடுத்த 5 ஆண்டுகளுக்கு புதிய ‘சிலாப்’ உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை 300 யூனிட்டுக்கு மேல் ஒரே கட்டணம் இருந்த நடைமுறையை மாற்றி புதிய சிலாப்பும் உருவாக்கப்பட் டுள்ளது.

இத்துடன் எனர்ஜி கட்டணமாக ஒரு கிலோ வாட்டுக்கு ரூ.2.30 வீதம் வசூலிக்கப்பட வுள்ளது. இது மக்களை அதிர்ச் சிக்கு உள்ளாக்கியுள்ளது. யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு மின் கட்டணத்தை மத் திய இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயிக்கிறது.

இதற்காக ஆண்டுதோறும் புதுவை மின்துறை வருவாய், செலவினங்களை இந்த ஆணையத்திடம் சமர்ப்பிக்கும். வரவு - செலவு அடிப்படையில் உத்தேச மின் கட்டண உயர்வு பட்டியலையும் ஆணையத்திடம் சமர்ப்பிக்கும். இதில் வீட்டு உபயோகம், பொது சேவை, வணிகம், ஹோட்டல் மற்றும் பண்ணை வீடுகள், தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கு உத்தேச கட்டணம் நிர்ணயித்து சமர்ப்பிக்கும்.

இதையடுத்து ஆணையம், மக்கள் கருத்துகேட்பு கூட்டத்தை நடத்தி மின் கட்டணத்தை உயர்வை நிர்ணயம் செய்யும். பெரும்பாலும் புதுவை அரசின் மின்துறை நிர்ணயிக்கும் கட்டணத்தையே ஆணையம் ஏற்று, அதற்கான அனுமதியை வழங்கும். கடந்த ஏப்ரல் மாதம் முதல் யூனிட்டுக்கு 45 பைசா வீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதையடுத்து, ‘அரசே இந்தமின் கட்டண உயர்வை ஏற்கும்’ என புதுச்சேரி அரசு அறிவித்தது. இதன்படி ரூ.35 கோடியை மின் துறைக்கு அரசு மானியமாக வழங்குகிறது. இந்த நிலையில் கடந்த அக். 1-ம் தேதி முதல் மின் கட்டணம் யூனிட்டுக்கு 20 பைசா உயர்த்தப்பட்டது. ‘ஒரே ஆண்டில் 2 முறை கட்டணத்தை உயர்த்துவதா?’ என அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து, ‘இந்த மின் கட்டண உயர்வையும் அரசே ஏற்கும்’ என அறிவிக்கப்பட்டது. இதற்கான கோப்பு துணைநிலை ஆளுநர் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதி கிடைத்தால் மின்துறைக்கு அரசு மேலும் ரூ.10 கோடியை மானியமாக வழங்கும். நுகர்வோருக்கு கட்டணம் உயராது என தெரிவிக்கப்பட்டது. அரசின் இந்த அறிவிப்பு இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.

இந்த நிலையில் 2025- 2030 வரை 5 ஆண்டுகளுக்கு மின் கட்டணத்தை உயர்த்த புதுவை அரசின் மின்துறை இணை ஒழுங்குமுறை மின்சார ஆணையத்திடம் அனுமதி பெற்றுள்ளது. இதன்படி நடப்பு ஆண்டில் வீட்டு உபயோக மின் கட்டணம் முதல் 100 யூனிட்டுக்கு ரூ.2.90, 101 முதல் 200 வரை ரூ.4.20, 201 முதல் 300 வரை ரூ.6.20, 301 முதல் 400 வரை ரூ.7.70, 400-க்கு மேல் ரூ.7.90 என கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.

இந்தக் கட்டணம் 1.10.2025 முதல் முன்தேதியிட்டு வசூலிக்கப்பட உள்ளது. வழக்கமாக மின் கட்டணம் முதல் 100 யூனிட், 101 முதல் 200, 201 முதல் 300, 300-க்கு மேல் என கட்டணம் நிர்ணயிக்கப்படும். தற்போது புதிதாக 301 முதல் 400, 400-க்கு மேல் என புதிய சிலாப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி குறைந்தபட்சமாக ஒரு யூனிட்டுக்கு 20 பைசா மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கும் அரசு மானியம் வழங்குமா என்பது இனிமேல்தான் தெரியவரும்.

அடுத்த ஆண்டு 2026-27-ல் இதே கட்டணம் வீட்டு உப யோகத்துக்கு தொடர்கிறது. ஆனால், 2027-28-ல் வீட்டு உபயோக மின் கட்டணம் முதல் 100 யூனிட்டுக்கு 20 பைசா உயர்ந்து ரூ.3.10 ஆக உயர்த்தப்பட உள்ளது. பிற சிலாப்புகளுக்கு எந்த உயர்வும் இல்லை.

2028-29-ல் வீட்டு உபயோக மின் கட்டணம் முதல் 100 யூனிட்டுக்கு ரூ.3.45, 101 முதல் 200 வரை ரூ.4.30, 201 முதல் 300 வரை ரூ.6.40, 301 முதல் 400 வரை ரூ.7.95, 400க்கு மேல் ரூ.8.15 என கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

2029-30-ல் வீட்டு உபயோக மின் கட்டணம் முதல் 100 யூனிட்டுக்கு ரூ.3.85, 101 முதல் 200 வரை ரூ.4.40, 201 முதல் 300 வரை ரூ.6.50, 301 முதல் 400 வரை ரூ.8.05, 400க்கு மேல் ரூ.8.25 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்துடன் எனர்ஜி கட்டணமாக ஒரு கிலோ வாட்டுக்கு ரூ.2.30 வீதம் வசூலிக்கப்படும் கட்ட ணம் ஆண்டுதோறும் உயர்ந்து 2029-30-ல் ரூ.3.75 ஆக உயர்த்தப்படுகிறது. இதேபோல மற்ற பிரிவுகளுக்கும் ஆண்டுவாரி யாக கட்டண உயர்வு அறிவிக் கப்பட்டுள்ளது. புதுவை மக்களிடையே இந்தமின் கட்டண உயர்வு கடும் அதிர்ச் சியை உருவாக்கியுள்ளது.

SCROLL FOR NEXT