வணிகம்

கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 90 டாலர்களை கடந்தது: மேற்காசிய போர்ச் சூழல் எதிரொலி!

வேட்டையன்

புதுடெல்லி: மேற்காசியாவில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த போர் தொடரும் சூழல் நிலவுகின்ற காரணத்தால் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 90 டாலர்களைக் கடந்துள்ளது. அது குறித்து விரிவாக பார்ப்போம்.

கடந்த வாரம் அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து ஈரானை தாக்கின. அதற்கு ஈரானும் பதிலடி கொடுக்கும் வகையில் வளைகுடா நாடுகளான சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை ஈரான் குறிவைத்துள்ளது.

          

இதற்கிடையே ஈரானின் நிபந்தனையற்ற சரணாகதி தவிர வேறு எந்த ஒப்பந்தத்திற்கும் இடமில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார். இதனால் மேற்காசியாவில் போர் தொடரும் சூழல் நிலவுகிறது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை ஏற்றம் கண்டுள்ளது. போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பல் போக்குவரத்து முழுமையாக முடங்கி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. சுமார் 3,200-க்கும் மேற்பட்ட சரக்கு கப்பல்கள் ஜலசந்தியின் இருபுறமும் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் கடந்த ஒரு வார காலமாக கச்சா எண்ணெய் விநியோகம் முடங்கியுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் கச்சா எண்ணெய் விநியோகம் மேலும் பாதிக்கப்படும்.

“தொடக்கத்தில் எண்ணெய் வயல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தவில்லை. ஆனால், சவுதி அரேபியா மற்றும் கத்தாரில் உள்ள எண்ணெய் வயல்கள் மீதான ஈரான் தாக்குதல் அந்தச் சூழலை மாற்றி அமைத்தது. இது நிலைமையை மேலும் மோசமடைய செய்தது. இதன் காரணமாக எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வல்லுநர்கள் கூறியுள்ளனர்” என்று எஸ் அண்ட் பி குளோபல் எனர்ஜி நிறுவனத்தின் ஜிம் புர்கார்த் தெரிவித்துள்ளார்.

கச்சா எண்ணெய் விலை ஏற்றம்: இந்த போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 90 டாலர்களை கடந்துள்ளது. ஒரே நாளில் சுமார் 12.21 சதவீதம் விலை ஒரு பேரலுக்கு உயர்ந்துள்ளது. கடந்த 2020 ஏப்ரலுக்கு பிறகு கச்சா எண்ணெயின் வாராந்திர விலையும் ஏற்றம் கண்டுள்ளதாக தெரிகிறது. போர் தொடர்ந்தால் இந்த விலை மேலும் உயரும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதை WTI எண்ணெய் விலை தரவு உறுதி செய்துள்ளது.

SCROLL FOR NEXT