புதுடெல்லி: புரொக்யூர் லாஜிஸ்டிக்ஸ் சர்வீசஸ் நிறுவனம், ஆக்ஸிஸ் வங்கி மீது தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த மனுவில், ‘‘2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி மத்திய அரசு, பணமதிப்பிழப்பு செய்தபோது, எங்கள் நிறுவனம் ஆக்ஸிஸ் வங்கியில் பணத்தை டெபாசிட் செய்ய சென்றபோது அதை ஏற்க வங்கி மறுத்தது’’ என்று கூறியிருந்தது.
இந்த மனுவை ஏவிஎம் ஜே.ராஜேந்திரா, ஆணைய உறுப்பினர் அனூப் குமார் மென்டிராட்டா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து, ‘‘புரொக்யூர் நிறுவனம் டெபாசிட் செய்த ரொக்கத்தை ஏற்காமல் வங்கி தவறு செய்துவிட்டது. எனவே, அந்த நிறுவனத்துக்கு ரூ.3.19 கோடியுடன், 2016-ம் ஆண்டு டிசம்பர் 30 முதல் 6 சதவீத வட்டியை கணக்கிட்டு அந்தத் தொகையையும் சேர்த்து ஆக்ஸிஸ் வங்கி வழங்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர்.