சென்னை: சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அதிகளவிலான யுபிவிசி தயாரிப்புகளால், உள்நாட்டு உற்பத்தி தொழில் பாதிக்கப்பட்டு வருவது தொடர்பாக அனைத்திந்திய யுபிவிசி புரொஃபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் நிறுவனர் ஆரோக்கியசாமி, தலைவர் இனியன் சிவம், துணைத் தலைவர்கள் வினோத் குமார், சஞ்சய், அறங்காவலர் செந்தில் முருகன் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் வீடுகளில் பரவலாக பயன்படுத்தப்படும் ஜன்னல்களுக்கான யுபிவிசி உதிரிப்பாகங்களை (புரொஃபைல்கள்) இந்திய நிறுவனங்கள் உள்நாட்டிலேயே தயாரித்து வருகின்றன.
ஆனால் சமீபகாலமாக வெளிநாடுகளிலிருந்து, குறிப்பாக சீனாவிலிருந்து அதிகளவில் இறக்குமதி செய்யப்படும் தரம் மற்றும் விலை குறைந்த யுபிவிசி பாகங்கள் இந்திய சந்தையை ஆக்கிரமித்து வருகின்றன.
மூலப்பொருட்களின் விலை வித்தியாசம் காரணமாக சீனா தயாரிப்புகள் ஒரு கிலோ ரூ.90-க்கு விற்கப்படும் நிலையில், இந்திய தயாரிப்புகள் ரூ.130-ல் இருந்து ரூ.180 வரை விற்கப்படுகின்றன.
இந்திய இறக்குமதி தரவுகளின்படி கடந்த 2024-ம் ஆண்டில் சீனாவிலிருந்து மட்டும் யுபிவிசி தயாரிப்புகள் ஒரு லட்சம் டன் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக 2025-ல் 1.54 லட்சம் டன்னாகவும், 2026-ல் முதல் 45 நாட்களில் 25 ஆயிரம் டன் இறக்குமதி ஆகியுள்ளன. இது கடந்த ஆண்டை விட 35 சதவீதம் அதிகமாகும்.
நடப்பாண்டு இந்த இறக்குமதி 2 முதல் 2.5 லட்சம் டன் தொடும் என எதிர்பார்க்கலாம். யுபிவிசி தயாரிப்புகளுக்கான சந்தையில் 51 சதவீதப் பங்கை இறக்குமதி தயாரிப்புகள் மட்டுமே பிடித்துள்ள நிலையில், உள்நாட்டு உற்பத்தியாளர்களின் பங்கு 45 சதவீதமாக தற்போது குறைந்துள்ளது.
எனவே இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு இறக்குமதி செய்யப்படும் அனைத்து யுபிவிசி பொருட்களுக்கும் தரக்கட்டுப்பாடு நிறுவனத்தின் தரச் சான்றிதழை துறைமுகங்களிலேயே வழங்குவதைக் கட்டாயமாக்க வேண்டும். மூலப் பொருட்களுக்கான வரி விகிதங்களை சீரமைக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.