மதுரை: சுதந்திர தினத்தை முன்னிட்டு ரூ.1 கட்டணத்தில் சிம்கார்டு வழங்கும் சலுகை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என பிஎஸ்என்எல் முதன்மை பொது மேலாளர் லோகநாதன் கூறினார்.
மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம், ஆக.12 முதல் செப்.12 வரை ஃப்ரீடம் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.1 கட்டணத்தில் இலவச சிம் கார்டு வழங்கும் சலுகையை அறிமுகம் செய்துள்ளது.
மேலும் ரூ.1,111 எப்டிடிஎச் திட்டம், சேட்டிலைட் போன் சேவை உள்ளிட்ட பிற சேவை மற்றும் சிறப்புச் சலுகைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள சேவை மையங்களில் இலவச சிம் கார்டு, சலுகை விலை எப்டிடிஎச் திட்டம் வழங்கப்படுகிறது.
பிஎஸ்என்எல்-ன் 4ஜி சேவை 1,014 கோபுரங்களில் செயல்பாட்டில் உள்ளதால் 2ஜி, 3ஜி சேவைகளைப் பயன் படுத்தும் வாடிக்கையாளரகள் தங்களது சிம் கார்டை இலவசமாக 4ஜி சிம் கார்டாக மேம்படுத்திக் கொள்ளலாம். சமீபத்தில் ஸ்கைப்ரோ என்ற நிறுவனத்துடன் இணைந்து இணைய இணைப்பு மூலம் ஐபிடிவி சேவையை அறிமுகம் செய்துள்ளது.
இதன்மூலம் ரூ.122 முதல் தொடங்கும் கட்டண திட்டங்களில் 400 இலவச சேனல்களை பார்க்கலாம். வாடிக்கையாளர்களின் புகார்களுக்கு எளிதாக தீர்வு பெற சாட்பாட் என்ற சேவையையும் அறிமுகம் செய்துள்ளோம். 1800 4444 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். ரூ.199 முதல் தினசரி டேட்டாவுடன் மாதாந்திர ப்ரீபெய்ட் திட்டங்கள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
உடன் துணை பொது மேலாளர்கள் அனூப், அனிதா, துரைசாமி, தலைமை கணக்கு அதிகாரி வாவேர்துரை ஆகியோர் பங்கேற்றனர். மதுரையில் செய்தியாளர்களை சந்திந்த பிஎஸ்என்எல் முதன்மை பொது மேலாளர் லோகநாதன், துணை பொது மேலாளர்கள்.