அகமதாபாத்: இந்தியக் கொடியுடன் கூடிய 80,000 டன் கச்சா எண்ணெய் ஏற்றிய 'ஜக் லாட்கி' கப்பல் குஜராத்தில் உள்ள அதானி முந்த்ரா துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படை ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருவதால் உலக நாடுகளுக்கு சரக்குக் கப்பல் செல்லக் கூடிய ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய், எரிவாயு போக்குவரத்து முடங்கி எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில் மத்திய அரசு மேற்கொண்ட முயற்சியால் இந்தியக் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து செல்ல ஈரான் சிறப்பு அனுமதி கொடுத்தது. இதையடுத்து மொத்தம் 92,712 டன் எல்பிஜி உடன் ஷிவாலிக் என்ற டேங்கர் கப்பலும் (மார்ச் 16) சுநந்தா தேவி (மார்ச் 17) என்ற மற்றொரு டேங்கர் கப்பலும் அடுத்தடுத்து இந்தியா வந்து சேர்ந்தன.
இந்நிலையில், இந்தியக் கொடியேந்தி 'ஜக் லாட்கி' கப்பல் சுமார் 80,886 டன் கச்சா எண்ணெயுடன் நேற்று முந்த்ரா துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த சரக்கு கப்பல் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைரா துறைமுகத்தில் கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு புறப்பட்டது. 22 கப்பல் பாதுகாப்பாக உள்ளது.
கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் ராஜேஷ் குமார் சின்ஹா நேற்று கூறும்போது, "தற்போது ஹார்முஸ் ஜலசந்திக்கு மேற்கே 22 இந்தியக் கப்பல்களில் உள்ள 611 நபர்கள் உட்பட, அனைத்து இந்தியக் கப்பல்களும் இந்தியக் குடிமக்களும் பாதுகாப்பாக உள்ளனர். இதுவரை அசம்பாவிதங்கள் ஏதும் பதிவாகவில்லை.
கடந்த 24 மணி நேரத்தில், அந்தப் பிராந்தியத்தின் பல்வேறு துறைமுகங்கள் மற்றும் இடங்களில் இருந்து வெளியேறுவதற்கான நடைமுறைகள் முடிக்கப்பட்டு, 25 இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். ஏற்கெனவே இந்தியா வந்த சிவாலிக் மற்றும் நந்தா தேவி ஆகிய கப்பல்களில் இருந்து எல்பிஜி சரக்குகளை இறக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது" என்றார்.