இந்தியாவில் உடல் பருமன் பிரச்சினை அதிகரித்து வரும் நிலையில், நீடித்த உடல் எடை குறைப்பு மற்றும் சிறந்த மெட்டபாலிக் ஆரோக்கியத்தை அடைவதற்கு சரியான நேரத்தில் மருத்துவ தலையீடும், முழுமையான சிகிச்சை அணுகுமுறைகளும் அவசியம் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
உடல் பருமன் பிரச்சினை இந்தியாவின் முக்கியமான சுகாதாரச் சவால்களில் ஒன்றாக உருவெடுத்து வருகிறது. இது அனைத்து வயதினரையும் பாதிப்பதுடன், நகர்ப்புறங்களைத் தாண்டி பல்வேறு பகுதிகளிலும் அதிகரித்து வருகிறது. உடல் இயக்கம் குறைந்த வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள், போதிய உடற்பயிற்சி இன்மை, மன அழுத்தம், தூக்கமின்மை மற்றும் மெட்டபாலிக் காரணிகள் ஆகியவை உடல் பருமன் அதிகரிப்புக்கு முக்கிய காரணிகளாக உள்ளன.
குறிப்பாக, உடல் பருமன் என்பது தோற்றம் அல்லது உடல் எடையுடன் மட்டும் தொடர்புடைய பிரச்சினை இல்லை. இது ஒரு நாள்பட்ட மருத்துவ நிலையாகும். இது டைப் 2 நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய், தூக்கத்தில் மூச்சுத்திணறல் (Sleep Apnea), கொழுப்பு கல்லீரல் நோய், மூட்டு பிரச்சினைகள், ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் உடல் இயக்கம் குறைதல் போன்ற பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுடன் தொடர்புடையது. மேலும், இது ஒருவரின் மனநலம், தன்னம்பிக்கை மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தையும் பாதிக்கக்கூடும்.
கிரீம்ஸ் ரோடு, அப்போலோ மருத்துவமனையைச் சேர்ந்த, இரைப்பை குடல், பேரியாட்ரிக், மெட்டபாலிக் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணர், டாக்டர் நிகிலேஷ் கிருஷ்ணா கூறுகையில், “இந்தியாவில் அதிகரித்து வரும் உடல் பருமன் ஒரு முக்கியமான பொது சுகாதாரப் பிரச்சினையாக மாறி வருகிறது. இது நீரிழிவு, இதய நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் வாழ்க்கைத் தரம் குறைதல் போன்ற பல்வேறு பிரச்சினைகளுடன் தொடர்புடையது.
டாக்டர் நிகிலேஷ் கிருஷ்ணா
குறிப்பாக, வழக்கமான உடல் எடை குறைப்பு முறைகள் நீடித்த பலனை அளிக்காத கடுமையான உடல் பருமன் கொண்டவர்களுக்கு, பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை ஒரு பயனுள்ள மற்றும் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்ட சிகிச்சை முறையாக உருவெடுத்துள்ளது.
குறைந்தபட்ச ஊடுருவல் அறுவை சிகிச்சை முறைகள் மற்றும் முழுமையான அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களால், நோயாளிகள் இன்று பாதுகாப்பான சிகிச்சை, விரைவான மீட்பு மற்றும் நீண்டகால ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைப் பெற முடிகிறது” என்றார்.
உடல் பருமனுடன் வாழும் பலர், உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் சில சந்தர்ப்பங்களில் மருந்துகள் மூலம் பல ஆண்டுகளாக உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்கின்றனர். இந்த முறைகள் சரியான நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கலாம் என்றாலும், அவற்றின் பலன் ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம்.
மேலும், சிகிச்சை நிறுத்தப்பட்ட பிறகு மீண்டும் உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது. எனவே, குறிப்பாக அதிக உடல் பருமன் அல்லது அதனுடன் தொடர்புடைய உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள், உடல் எடை குறைப்பு மருந்துகளை முறையான மருத்துவ மதிப்பீட்டிற்குப் பிறகு, மருத்துவ நிபுணர்களின் கண்காணிப்பின் கீழ் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
லைஃப்லைன் மருத்துவமனைகளைச் சேர்ந்த ரோபோடிக் பேரியாட்ரிக் மற்றும் இரைப்பை குடல் அறுவை சிகிச்சை நிபுணர், டாக்டர் அனிருத் ராஜ்குமார் கூறுகையில், “உடல் பருமனை வெறுமனே ஒருவரின் சுயக்கட்டுப்பாடு அல்லது மனவலிமையுடன் தொடர்புடைய பிரச்சினையாக பார்க்காமல், ஒரு நாள்பட்ட மருத்துவ நிலையாக அணுக வேண்டும்.
டாக்டர் அனிருத் ராஜ்குமார்
ஆரம்ப நிலையிலேயே மருத்துவ மதிப்பீடு செய்வதன் மூலம், உடல் பருமனுடன் தொடர்புடைய மெட்டபாலிக் பிரச்சினைகளைக் கண்டறிந்து, ஒவ்வொரு நோயாளிக்கும் ஏற்ற சிகிச்சை முறையைத் தீர்மானிக்க முடியும். ஊட்டச்சத்து, உடற்பயிற்சி, நடத்தை சார்ந்த ஆதரவு மற்றும் தேவைக்கேற்ப மருத்துவ அல்லது அறுவை சிகிச்சை தலையீடுகளை ஒருங்கிணைத்த தனிப்பட்ட அணுகுமுறை, நீண்டகால சிறந்த பலன்களை அடைய உதவும்” என்கிறார்.
வழக்கமான சிகிச்சை முறைகள் மூலம் போதுமான அல்லது நீடித்த உடல் எடை குறைப்பை அடைய முடியாத கடுமையான உடல் பருமன் கொண்டவர்களுக்கு, பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை ஒரு முக்கியமான சிகிச்சை வாய்ப்பாக இருக்கலாம். ஸ்லீவ் காஸ்ட்ரெக்டமி (Sleeve Gastrectomy) மற்றும் காஸ்ட்ரிக் பைபாஸ் (Gastric Bypass) போன்ற நவீன பேரியாட்ரிக் அறுவை சிகிச்சைகள் குறிப்பிடத்தக்க மற்றும் நீடித்த உடல் எடை குறைப்பை சாத்தியம் ஆக்குவதுடன், உடலின் மெட்டபாலிக் செயல்பாடுகளிலும் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இதன் மூலம் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், தூக்கத்தில் மூச்சுத்திணறல் மற்றும் உடல் பருமனுடன் தொடர்புடைய இயக்கப் பிரச்சினைகள் போன்றவை மேம்பட உதவும்.
லேப்ராஸ்கோபிக் மற்றும் குறைந்தபட்ச ஊடுருவல் அறுவை சிகிச்சை முறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் பேரியாட்ரிக் சிகிச்சையிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. சிறிய அறுவை சிகிச்சை கீறல்கள், குறைவான அறுவை சிகிச்சை பாதிப்பு, குறுகிய கால மருத்துவமனை தங்கல் மற்றும் விரைவான மீட்பு ஆகியவை நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சை அனுபவத்தை வழங்குகின்றன.
இருப்பினும், சிகிச்சையின் வெற்றி அறுவை சிகிச்சையை மட்டும் சார்ந்திருக்காது. நோயாளித் தேர்வு, ஊட்டச்சத்து ஆலோசனை, வாழ்க்கை முறையில் மாற்றங்கள் மற்றும் நீண்டகால மருத்துவ கண்காணிப்பு ஆகியவையும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
அப்போலோ ஃபர்ஸ்ட் மெட் மருத்துவமனையைச் சேர்ந்த லேப்ராஸ்கோபிக், ரோபோடிக் மற்றும் பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை நிபுணர், ஆலோசகருமான டாக்டர் ப்ரீத்தி மிருணாளினி கூறுகையில், “பேரியாட்ரிக் சிகிச்சையின் நோக்கம் வெறும் உடல் எடையை குறைப்பதாக மட்டும் இருக்கக்கூடாது.
டாக்டர் ப்ரீத்தி மிருணாளினி
நீடித்த உடல் எடை குறைப்பு, சிறந்த மெட்டபாலிக் ஆரோக்கியம், உடல் இயக்கத்தில் முன்னேற்றம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் ஆகியவையும் அதன் முக்கியமான இலக்குகளாகும். முறையான மருத்துவ மதிப்பீடு மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்புடன், பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை தகுதியான நோயாளிகள் ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கையை நோக்கி முன்னேற உதவும்” என்கிறார்.
உடல் பருமனுடன் தொடர்புடைய உடல்நலப் பிரச்சினைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உடல் பருமனை ஒரு மருத்துவ நிலையாக அங்கீகரிப்பது அவசியமாகிறது. இது சமூகத்தில் நிலவும் தவறான புரிதல்களையும் களங்கத்தையும் குறைத்து, மக்கள் சரியான நேரத்தில் மருத்துவ உதவியை நாட ஊக்குவிக்கும். ஆரம்ப நிலையிலேயே மருத்துவ மதிப்பீடு மேற்கொள்வதன் மூலம், தனிநபர்கள் தங்களுக்கான உடல்நல அபாயங்களைப் புரிந்துகொண்டு, பொருத்தமான சிகிச்சை முறைகளைத் தேர்வு செய்ய முடியும்.
சரியான நோயாளிகளுக்கு முறையாக பரிந்துரைக்கப்பட்டு, முழுமையான வாழ்க்கை முறை மற்றும் ஊட்டச்சத்து பராமரிப்புடன் பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் போது, கடுமையான உடல் பருமன் மற்றும் அதனுடன் தொடர்புடைய உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்வதில் அது முக்கிய பங்கு வகிக்கிறது. இறுதியில், உடல் எடை குறைப்பில் மட்டும் அல்ல. நீண்டகால ஆரோக்கியம், நீடித்த உடல் எடை மேலாண்மை மற்றும் மேம்பட்ட வாழ்க்கைத் தரம் ஆகியவற்றில் கவனம் இருக்க வேண்டும்.