வலைஞர் பக்கம்

“கே-பாப், கே-டிராமாவை விட ஆழமானது கொரிய இலக்கியம்!” - நாவலாசிரியர் பியூன் ஹியே-யங் நேர்காணல்

முனைவர் மனோலஷ்மி பாண்டியராஜன்

தமிழகத்தில் சமீப காலமாக கொரிய கலாச்சாரம் மற்றும் ஊடகங்கள் மீதான ஆர்வம் (Hallyu) அதிகரித்து வரும் சூழலில், 2026 சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சியிலும் (CIBF) நாம் கொரிய இலக்கியங்களின் பங்களிப்பை பார்க்க முடிந்தது.

தென்கொரிய கலாச்சாரத்தின் உலகளாவிய எழுச்சி - பெரும்பாலும் ஹல்யு (Hallyu) அலை என்று அழைக்கப்படுகிறது. கே-பாப் (K-pop) இசையின் துடிப்பான ஆற்றலும், கே-டிராமாக்களின் (K-dramas) விறுவிறுப்பான காட்சிகளாலும் அடையாளப்படுத்தப்படுகிறது. மேலும், கொரிய எழுத்துலகின் ஒரு அமைதியான, ஆழமான புரட்சி நடந்து கொண்டிருக்கிறது.

கொரிய இலக்கியம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளைக் கடந்து வளர்ந்த ஒன்று. பல நூற்றாண்டுகளாக வாய்மொழிக் கதைகளும், கவிதைகளும் இருந்தன. ‘சம்குக் யூசா’ (Samguk Yusa) போன்ற படைப்புகள் புராணங்களையும் வரலாறையும் பதிவு செய்தன. ஜோசோன் காலத்தில் கன்பூசிய சிந்தனை இலக்கியத்தை வடிவமைத்தது.

          

இருபதாம் நூற்றாண்டில் ஜப்பானின் ஆக்கிரமிப்பும், போர் மற்றும் பிரிவுகளும் கொரிய எழுத்தாளர்களை ஆழமாக பாதித்துள்ளன. தனிமை, அடையாளம், நகர வாழ்க்கை, அரசியல் நினைவுகள் ஆகியவை இன்றைய கொரிய இலக்கியத்தின் முதன்மை கருப்பொருளாக உள்ளன.

சமகால கொரிய இலக்கியத்தின் மிக முக்கியமான மற்றும் தனித்துவமான குரல்களில் ஒருவராக உள்ளார் பியூன் ஹியே-யங் (Pyun Hye-young). இவரது ‘தி ஹோல்’ (The Hole) என்ற நாவல் இவரை சர்வதேச வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. இந்த நாவல், ஒரு கார் விபத்தில் தனது மனைவியை இழந்து, உடல் இயக்கத்தை இழந்த நிலையில் தனது மாமியாரின் பராமரிப்பில் இருக்கும் ஒருவரின் கதையைச் சொல்கிறது.

உடல் ரீதியான முடக்கம் மற்றும் உளவியல் ரீதியான சித்ரவதையை மிக நுணுக்கமாக விவரிக்கும் இந்தப் படைப்பு, ஸ்டீபன் கிங்கின் ‘மிஸரி’ (Misery) நாவலோடு ஒப்பிடப்படுகிறது. இவரது மற்றொரு முக்கியமான படைப்பு ‘சிட்டி ஆஃப் ஆஷஸ்’ (City of Ashes). இது ஒரு மர்மமான தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட நகரத்தின் பின்னணியில், மனிதர்களின் தப்பிப் பிழைக்கும் போராட்டத்தையும், அதிகார வர்க்கத்தின் அலட்சியத்தையும் காட்டுகிறது. ‘தி லா ஆஃப் லைன்ஸ்’ (The Law of Lines) சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் மனிதர்களின் துயரங்களையும், அவர்கள் எதிர்கொள்ளும் வன்முறைகளையும் மையமாகக் கொண்ட படைப்பு.

2017-ஆம் ஆண்டு இவரது ‘தி ஹோல்’ நாவலுக்காக ஷெர்லி ஜாக்சன் சர்வதேச விருது (Shirley Jackson Award) வழங்கப்பட்டது. உளவியல் திகில் மற்றும் மர்ம வகை இலக்கியங்களில் சிறந்து விளங்குபவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. பியூனின் எழுத்து நடை மிகவும் சுருக்கமானது, ஆழமானது. அவர் எழுதும் கதாபாத்திரங்கள் வார்த்தைகளை விட மௌனத்தின் மூலமே அதிக உணர்ச்சிகளைக் வெளிப்படுத்துகின்றன.

சமூகத்தின் ‘மென்மையான மேற்பரப்பிற்கு’ அடியில் மறைந்திருக்கும் பயம் மற்றும் கவலையைத் தோண்டி எடுப்பதில் பியுன் ஒரு வல்லுநர். பியூனின் படைப்புகள், கொரியாவின் கடந்த கால வரலாற்றுச் சுமைக்கும், தற்காலத்தின் சிதறுண்ட உளவியல் நிலைக்கும் இடையே ஒரு முக்கியமான பாலமாகச் செயல்படுகின்றன. பியூன் ஹியே-யங்கிடம் சில கேள்விகளை முன்வைத்தேன்.

சமகால கொரிய இலக்கியம் எப்படி இருக்கிறது?

“சமகால கொரிய நாவல்களில், ‘போர்’ என்பது இனி போர்க்களங்களில் நடப்பதில்லை; மாறாக, அது ஓர் அடுக்குமாடி குடியிருப்பின் தனிமையிலோ அல்லது போட்டி நிறைந்த அலுவலகத்திலோ நடக்கிறது. பல தசாப்தங்களாக, கொரிய இலக்கியம் ‘மகா கதையாடல்களால்’ (Grand Narratives) வரையறுக்கப்பட்டிருந்தது. ஜப்பானிய ஆக்கிரமிப்பின் வடுக்கள், கொரியப் போரின் அழிவு மற்றும் ராணுவ சர்வாதிகாரத்தின் கொடுமைகள் ஆகியவை ஒரு கூட்டு சாட்சியமாக இலக்கியம் இருக்க வேண்டிய அவசியத்தை உருவாக்கின.

இருப்பினும், தேசம் ஓர் உயர்தொழில்நுட்ப ஜனநாயகமாக மாறியபோது, எழுத்தாளர்களின் கவனம் மாறத் தொடங்கி இருக்கிறது. 2024-ஆம் ஆண்டு ஹான் காங் (Han Kang) பெற்ற நோபல் பரிசு, குறிப்பாக ‘ஹியூமன் ஆக்ட்ஸ்’ (Human Acts) போன்ற படைப்புகள், இந்த மாற்றத்தை மிகச் சரியாகப் பிரதிபலிக்கின்றன. கூட்டு (போர் போன்ற) வரலாற்று நினைவு தனிப்பட்ட உளவியல் அனுபவத்தின் வழியே வடிகட்டப்படுகிறது.

சமூகப் பிரச்சினைகளை மனித உணர்ச்சிகளின் ‘விரிசல்கள் மற்றும் எஞ்சியிருக்கும் எச்சங்கள்’ மூலமே சிறப்பாக ஆராய முடியும். கூட்டு வரலாற்று நினைவுகள் (போர், சர்வாதிகாரம்) மறைந்துவிட்டன என்று சொல்வதற்குப் பதிலாக, அவை வெளிப்படுத்தப்படும் விதம் பரிணாம வளர்ச்சியடைந்து, தனிப்பட்ட உணர்ச்சிகள் மற்றும் உளவியலில் ஆழமாக ஊடுருவி வருகின்றன என்று நான் நம்புகிறேன்.”

இன்றைய கொரிய கலாச்சாரம் குறித்து...

“கே-பாப்பும், கே-டிராமாக்களும் தங்களின் கதைத்தளத்தையும், காட்சி வடிவமைப்புகளையும் கொண்டு மக்களின் கவனத்தை ஈர்க்கும் வேளையில், இலக்கியம் அந்த உணர்ச்சிகளைத் துல்லியமாகப் பகுத்தாய்வு செய்கிறது. மக்கள் கலாச்சாரம் ஒரு ‘மென்மையான மேற்பரப்பை’ வழங்கினால், அதற்கு அடியில் மறைந்திருக்கும் ‘கவலைகள், முரண்பாடுகள் மற்றும் விழுமியங்களை’ வெளிப்படுத்தும் சக்தியாக இலக்கியம் விளங்குகிறது.

கொரியத் திரைப்படங்களின் உலகளாவிய வெற்றி, புதிய வாசகர்கள் இலக்கிய உலகிற்குள் நுழைவதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளது. மாயைகளின் வழியே உலகைப் பார்ப்பதை விட, கேள்விகள் மற்றும் விரிசல்களின் வழியே உலகைப் பார்க்கும் ஆற்றலை இலக்கியம் நமக்கு வழங்குகிறது.”

மொழிபெயர்ப்பாளரின் சுதந்திரம் எவ்வாறு உள்ளது?

“கொரிய இலக்கியம் உலகளாவிய வாசகர்களைச் சென்றடையும் போது, மொழிபெயர்ப்பின் பங்கு வெறும் மொழி மாற்றத்திலிருந்து கலாச்சார விரிவாக்கமாக மாறியுள்ளது. கடந்த காலத்தில், கொரிய எழுத்தாளர்கள் ‘அடிக்குறிப்புகளின் சுமை’யை சுமக்க வேண்டியிருந்தது. சோஜு (soju) அல்லது கிம்ச்சி (kimchi) தயாரிக்கும் சடங்குகள் போன்ற ஒவ்வொரு கலாச்சார நுணுக்கத்தையும் விளக்க வேண்டிய கட்டாயம் மொழிபெயர்ப்பாளர்களுக்கு இருந்தது.

ஆனால் இன்று, உலகளாவிய வாசகர்களுக்கு கொரிய வாழ்க்கை முறை பரிச்சயமாகிவிட்டதால், இந்த அடிக்குறிப்புகள் தேவையற்றதாகிவிட்டன. இந்த கலாச்சார அறிவு, மொழிபெயர்ப்பாளர் சொற்களுக்கு விளக்கம் அளிப்பதை விடுத்து, வசனத்தின் ‘நுட்பமான சொல்லாடலில்’ கவனம் செலுத்த அனுமதிக்கிறது. இது ஒரு சர்வதேச வாசகரின் அனுபவத்தை, சியோலில் இருக்கும் ஒரு வாசகரின் அனுபவத்தோடு ஒன்றிணையச் செய்கிறது.”

தற்கால எழுத்தாளரின் பொறுப்பு குறித்து...

“சர்வதேச அளவில் புகழ்பெற்ற எழுத்தாளர்களை ‘சமூகப் பொறுப்பு’ அல்லது ‘கலாச்சாரத் தூதுவர்’ என்ற சுமையைத் சுமக்கச் சொல்லும் ஒரு தூண்டுதல் எப்போதும் இருக்கிறது என்பதை நான் மறுக்கிறேன். ஒரு எழுத்தாளரின் ஒரே உண்மையான பொறுப்பு, அவர்கள் பயன்படுத்தும் நடை மற்றும் மொழிக்கு (style and language) நேர்மையாக இருப்பது மட்டுமே.

கொரிய இலக்கியத்தின் எதிர்காலம் என்பது மற்ற ஊடகங்களோடு இணைந்து வாழ்வதே. அது டிஜிட்டல் மீடியா மற்றும் மக்கள் கலாச்சாரத்துடன் தொடர்ந்து பயணிக்கும்.

- முனைவர் மனோலஷ்மி பாண்டியராஜன் | உதவி பேராசிரியர், இதழியல் துறை, தொலைத்தூர கல்வி மையம், சென்னை பல்கலைக்கழகம்.

SCROLL FOR NEXT