தமிழ் மற்றும் தமிழ் பண்பாட்டை புனரமைக்கும் நோக்கிலும், தமிழுக்காக உழைப்பவர்களை கவுரவிக்கும் நோக்கிலும் ‘பண்ணிசைப் பெருவிழா’ எனும் நிகழ்ச்சியை மார்ச் 22-ம் தேதி விஜில் அமைப்பு நடத்த இருக்கிறது.
இது குறித்து விஜில் அமைப்பு வெளியிட்ட தகவல்: சென்னை மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். உயர்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள தக்ஷிணாமூர்த்தி அரங்கத்தில் இரண்டு அமர்வுகளாக இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் 1 மணி வரை முதல் அமர்வும், மாலை 6 மணி முதல் 8.30 மணி வரை இரண்டாம் அமர்வும் நடைபெற உள்ளன.
இந்த நிகழ்ச்சியில், செங்கோல் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சாரிய சுவாமிகள், தொண்டை மண்டல ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ திருச்சிற்றம்பல தேசிகர் ஞானப்பிரகாச பரமாச்சாரிய சுவாமிகள், திண்டுக்கல் ஆதீனம் சிவபுரம் ஸ்ரீலஸ்ரீ திருநாவுக்கரசு தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
தமிழ் மற்றும் தமிழ் பண்பாட்டை புனரமைக்கும் நோக்கிலும், தமிழுக்காக உழைப்பவர்களை கவுரவிக்கும் நோக்கிலும், மிகவும் தொன்மை வாய்ந்த தமிழ் கலைகளை வாழ வைப்பவர்களை மரியாதை செய்யும் நோக்கிலும், ஓதுவார்களைக் கொண்டாடும் நோக்கிலும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.