தாய்நாட்டில் திரண்ட ரசிகர்கள்: அர்ஜெண்டினா அணியினரின் வெற்றிப் பேரணியில் தவிர்க்கப்பட்ட விபத்து

By செய்திப்பிரிவு

பியூனஸ் அயர்சில்: 2022 ஃபிஃபா உலகக் கோப்பையை வென்று நாடு திரும்பிய அர்ஜெண்டினா அணிக்கு ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர். இந்த நிலையில், மிகுதியான கூட்டத்தால் வீரர்கள் சென்ற பேருந்து விபத்துகளில் இருந்து நல்வாய்ப்பாக தப்பிய சம்பவம் நடந்துள்ளது.

ஃபிஃபா 22-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் லயோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி, பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. 36 வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் அர்ஜெண்டினா வாகை சூடியுள்ளது. அந்த அணி உலகக் கோப்பையை வெல்வது இது 3-வது முறையாகும். சாம்பியன் பட்டம் வென்ற குதூகலத்தில் ஓய்வு பெறும் திட்டத்தையும் தற்போதைக்கு தள்ளி வைத்துள்ளார் மெஸ்ஸி. இது மெஸ்ஸி ரசிகர்களை மேலும் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

அந்த வகையில் நாடு திரும்பிய அர்ஜெண்டினா அணிக்கு தலைநகர் பியூனஸ் அயர்சில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. வழி நெடுகிலும் பல்லாயிரக்கணக்கில் கூடி இருந்த ரசிகர்கள், தங்கள் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். சாலைகளின் இரு புறங்களிலும் மக்கள் ஆடிப்பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அப்போது திறந்தவெளி பேருந்தின் மேற்கூறையில் அமர்ந்திருந்த அர்ஜெண்டினா அணி வீரர்கள் உலகக் கோப்பையை பொதுமக்களிடம் காட்டி மகிழ்ந்தனர். அப்போது கடும் கூட்ட நெரிசல் காரணமாக சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, சாலைகளில் தொங்கிக் கொண்டிருந்த கேபிள்கள் வீரர்களின் தலையை உரசியது பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதிலிருந்து அதிர்ஷ்டவசமாக வீரர்கள் தப்பினர்.

மேலும், செவ்வாய்க்கிழமை நடந்த ஊர்வலத்தில் பேருந்து பாலத்தை கடக்கும்போது உணர்ச்சி மிகுதியில் பாலத்தின் மேலே நின்று கொண்டிருந்த ரசிகர்கள், வீரர்களின் பேருந்து மீது விழுந்தனர். இதில் அர்ஜெண்டினா வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் சிறிய காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஊர்வலம் சற்று நேரம் நிறுத்தப்பட்டு பின்னர் தொடர்ந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவ்வாறு இரு விபத்துகளிலிருந்து அர்ஜெண்டினா வீரர்கள் தப்பியுள்ளனர்.

வெற்றி குறித்து அர்ஜெண்டினா பயிற்சியாளர் ஸ்கலோனி கூறும்போது, “நான் பெருமைப்படுகிறேன். மற்ற நாட்களை விட நான் உற்சாகமாக இருக்கிறேன், ஆனால் இன்று நான் சுதந்திரமாக இருக்கிறேன். இந்த அணி என்னைப் பெருமைப்படுத்துகிறது. இது ஒரு வரலாற்றுத் தருணம் என்பதால் நாட்டு மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபடட்டும். இது ரசிக்க வேண்டிய நேரம். உச்சியில் இருப்பது தனித்துவமானது, நம்பமுடியாத இன்பம். எப்போதும் விடாமுயற்சியுடன் முன்னேற வேண்டும் என்று எனது அப்பாவும் அம்மாவும் எனக்குக் கற்றுக் கொடுத்தார்கள்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

4 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

தமிழகம்

11 hours ago

சினிமா

12 hours ago

மேலும்