சீனாவின் வனப்பகுதியில் விபத்துக்குள்ளான போயிங் ரக பயணிகள் விமானத்தின் கருப்புப் பெட்டியை மீட்புக் குழுவினர் கண்டெடுத்துள்ளனர்.
சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737 ரக விமானம், அந்நாட்டின் குன்மிங் நகரில் இருந்து வூஸுநகருக்கு கடந்த 21-ம் தேதி மதியம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 123 பயணிகள், 9 ஊழியர்கள் உட்பட மொத்தம் 132 பேர் இருந்ததாக சீன விமான போக்குவரத்துத் துறை தெரிவித்தது.
இந்த விமானம் குவாங்சூ மாகாணத்தில் உள்ள மலைப்பகுதிக்கு மேல் 31 ஆயிரம் அடி உயரத்தில்பறந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து நொறுங்கி தீப் பிடித்து எரிந்தது.
தகவலறிந்து அங்கு விரைந்துசென்ற தீயணைப்புப் படையினரும், மீட்புக் குழுவினரும் போராடி தீயை அணைத்தனர். அங்கு கிடந்த இடிபாடுகளுக்குள் விமானபாகங்களை கண்டறியும் முயற்சியில் மீட்புக் குழு ஈடுபட்டது.
விபத்து ஏற்பட்டு 36 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த மீட்புப் பணியின்போது யாரும் உயிருடன் மீட்கப்படவில்லை. எனவே அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கக்கூடும் என மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
விமானத்துக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளதால் விபத்துக்கான காரணத்தைக் கண்டறிவது கடினமாக இருக்கும் என சீன அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து விமானத்தின் கருப்புப் பெட்டியை தேடும் பணியில் அதிகாரிகள் 3-வது நாளாக நேற்றும் ஈடுபட்டனர்.
இந்நிலையில், விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப்பெட்டி நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து சீனா விமானப் போக்குவரத்து துறைசெய்தித் தொடர்பாளர் லியு லுசாங்கூறும்போது, "விபத்தில் சிக்கிய விமானத்தில் இருந்து ஒரு கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
ஆனால், இந்த விமானத்தில் இரண்டு வகை கருப்புப் பெட்டிகள் பொருத்தப்பட்டிருந்தன. அதில் ஒன்று பின்பக்க பயணிகள் கேபினில் விமானத் தரவுகளை கண்காணிக்கும் ரெக்கார்டர் ஆகும். மற்றொன்று விமானிகள் அறையில் (காக்பிட்) பதிவாகும் குரல்களைப் பதிவு செய்யும் ரெக்கார்டர் ஆகும். ஆனால் தற்போது கண்டெடுக்கப்பட்ட பெட்டி எந்தவகையைச் சேர்ந்தது என்று தெரியவில்லை. இந்தப் பெட்டியை நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில், விமான விபத்து தொடர்பாக தீவிர விசாரணை நடத்துமாறு சீன அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார். தற்போது விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளதால் விமானம்ஏன் விபத்துக்குள்ளானது என்பதுதொடர்பான தகவல்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
25 mins ago
தமிழகம்
13 mins ago
தமிழகம்
29 mins ago
இந்தியா
53 mins ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
2 hours ago
உலகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
கருத்துப் பேழை
5 hours ago