ரூ.14 ஆயிரம் கோடி மோசடியாளர் மெகுல் சோக்ஸி டோமினிக்கா நாட்டில் கைது : சிக்கியது எப்படி? விசாரணையில் புதிய தகவல்

By பிடிஐ


பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14 ஆயிரம் கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்த தொழிலதிபர் மெகுல் சோக்ஸி, டோமினிகா நாட்டிலிருந்து கியூபாவுக்கு படகில் தப்பிச் செல்லும் போது அந்நாட்டு போலீஸாரிடம் நேற்று சிக்கினார்.

கடந்த 2018ம் ஆண்டு முதல் கரீபியன் தீவான ஆன்டிகுவா அன்ட் பர்படாஸ் நாட்டில் வசித்துவந்த மெகுல் சோக்ஸி கடந்த ஞாயிறுமுதல் காணவில்லை. அவரை ஆன்டிகுவா போலீஸார் தேடி வந்தநிலையில் டோமினிகா நாட்டில் சிக்கியுள்ளார்.

கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆன்டிகுவா மற்றும் பர்படாஸில் முதலீட்டுத் திட்டம் மூலம் குடியுரிமையை மெகுல் சோக்ஸி பெற்றார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி கடன் பெற்று மோசடி செய்து 2018ம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் கரிபியன் தீவுக்கு மெகுல் சோக்ஸி குடும்பத்துடன் தப்பி அங்கு வாழ்ந்து வருகிறார் .

மெகுல் சோக்ஸியை இந்தியாவுக்கு அழைத்துவரும் நோக்கில் மத்திய அரசு விடுத்த கோரிக்கையை ஏற்று ஆன்டிகுவா அரசு மெகுல் சோக்ஸியின் குடியுரிமையை ரத்து செய்யும் பணியில் இறங்கியது. ஆனால், ஆன்டிகுவா அரசின் செயலுக்கு எதிராக மெகுல் சோக்ஸி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தடை பெற்றார்.

தலைமறைவு

மெகுல் சோக்ஸியின் கூட்டாளியும், கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் நிரவ் மோடி தற்போது லண்டன் சிறையில் உள்ளார், இவரை இந்தியாவுக்கு அழைத்துவரும் பணியில் சிபிஐ, அமலாக்கப்பிரிவினர் தீவிரமாக இருக்கிறார்கள்.

இந்நிலையில் கடந்த 23்ம்தேதி ஜாலி ஹார்பருக்கு மெகுல் சோக்ஸி சென்றார். அப்போதிருந்து மெகுல் சோக்ஸியைக் காணவில்லை. இதையடுத்து கடந்த 4 நாட்களாக ஆன்டிகுவா பர்படாஸ் போலீஸார் அண்டை நாடுகளுக்கும், தீவுகளுக்கும் தகவல் அளித்து மெகுல் சோக்ஸியைத் தேடி வந்தனர, மெகுல் சோக்ஸி குறித்து இன்டர்போல் போலீஸார் மூலம் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது.

கியூபா செல்ல திட்டம்

இந்நிலையில் ஆன்டிகுவா பர்படாஸ் தீவிலிருந்து தப்பித்த மெகுல் சோக்ஸி, படகு மூலம் கியூபா செல்லத் திட்டமிட்டுள்ளார். இதன்படி டோமினிக்கா நாட்டின் வடபகுதியான தலைநகர் ரோஸியில் உள்ள கேன்பீல்ட் கடற்கரையில் மெகுல் சோக்ஸி அந்நாட்டு போலீஸாரால் நேற்று கண்டுபிடிக்கப்பட்டார். ஆனால், படகில் வரும்போது, சில முக்கியமான ஆவணங்களை மெகுல் சோக்ஸி அழித்துவிட்டார்.

மெகுல் சோக்ஸி விமானம் மூலமாக டோமினிக்கா நாட்டுக்குள் வரவில்லை, சட்டவிரோதமாக படகு மூலம் வந்துள்ளதை அறிந்த போலீஸார் மெகுல் சோக்ஸியிடம் விசாரித்துள்ளனர். அப்போது எந்த காரணத்துக்காக நாட்டுக்கு வந்துள்ளீர்கள், ஆவணங்களை வாங்கி சரிபார்க்கும்போது சட்டவிரோதமாக வந்துள்ளதையடுத்து மெகுல் சோக்ஸியை டோமினிக்கா போலீஸார் கைது செய்தனர்.

ஆவணங்கள் அழிப்பு

மெகுல் சோக்ஸியிடம் டோமினிக்கா நாட்டு போலீஸார் நடத்திய விசாரணையில் தனிப்படகு மூலம் கியூபாவுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். பல ஆவணங்களை சோக்ஸி அழித்துள்ளதால், கடலில் வீசி எறிந்த ஆவணங்களை தேடும் பணியில் ஸ்கூபா நீச்சல் வீரர்ளை டோமினிக்கா போலீஸார் பயன்படுத்தியுள்ளனர். டோமினிக்கா குற்றவியல் போலீஸார் கட்டுப்பாட்டில் இருக்கும் மெகுல் சோக்ஸி இந்தியாவுக்கு கொண்டுவரப்படுவாரா அல்லது பர்படாஸ் தீவுக்கு கொண்டு செல்லப்படுவாரா என்பது குறித்து பேச்சு நடந்து வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

22 mins ago

விளையாட்டு

13 mins ago

தமிழகம்

37 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

மேலும்