மியான்மரில் ராணுவ ஆட்சி தொடர்ந்தால் அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
மியான்மர் அரசை திங்கட்கிழமையன்று அந்நாட்டு ராணுவம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. மேலும் அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூச்சி கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டுள்ளார். தலைநகரிலிருந்து தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், அவசர நிலையையும் ராணுவம் அமல்படுத்தியுள்ளது. ஒரு வருடத்திற்கு மியான்மர் ராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கும். சமீபத்தில் நடந்த தேர்தல் முறைகேடு காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ராணுவம் தரப்பில் கூறப்பட்டது.
மியான்மர் ரானுவத்தின் இந்த நடவடிக்கைகளுக்கு பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இந்த நிலையில் மியான்மர் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறும்போது, ''மியான்மரில் ராணுவ ஆட்சி தொடர்ந்தால் அந்த நாட்டின் மீது மீண்டும் கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும். ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியது நாட்டின் ஜனநாயகம் மற்றும் சட்டம் மீதான நேரடித் தாக்குதல்'' என்று விமர்சித்தார்.
நடந்தது என்ன?
கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சி தலைமையிலான ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. இத்தேர்தலை மியான்மர் ராணுவம் தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில் தற்போது ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
மியான்மர் ராணுவத்தின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், சட்டத்தை மதித்து நடக்கும்படியும் தெரிவித்துள்ளன.
கடந்த 1962 முதல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்றது. இதை எதிர்த்து தேசிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஆங் சான் சூச்சி சுதந்திரப் போராட்டத்தை வழிநடத்தினார். சுமார் 21 ஆண்டுகள் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
மக்களின் போராட்டம் காரணமாக கடந்த 2015-ல் அங்கு பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் ஆங் சான் சூச்சியின் கட்சி அமோக வெற்றி பெற்றது. அவரின் மகன்கள் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றிருப்பதால் அவரால் அதிபராகப் பதவியேற்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து சூச்சிக்கு நெருக்கமான டின் கியாவ் (71) அதிபராகப் பதவியேற்றார். நாட்டின் தலைமை ஆலோசகராக ஆங் சான் சூச்சி பொறுப்பேற்றார்.
ராக்கைன் மாநிலத்தில் ராணுவத் தளபதிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளால் 7.40 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர். சூச்சிக்கு இருந்த ஜனநாயக பிம்பமானது இந்த நடவடிக்கைகளை அவர் வெளிப்படையாக ஆதரித்ததன் காரணமாக கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
இந்த நிலையில் கரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 642 இடங்களுக்கு அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூச்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கட்சி உள்பட 90க்கும் மேற்பட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதாக ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
1 min ago
தமிழகம்
5 mins ago
தமிழகம்
25 mins ago
சினிமா
59 mins ago
சினிமா
1 hour ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
45 mins ago
இணைப்பிதழ்கள்
8 hours ago
இணைப்பிதழ்கள்
8 hours ago
இந்தியா
1 hour ago