நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது; அதிபர் பண்டாரி அறிவிப்பு: இடைத்தேர்தல் தேதியும் வெளியீடு

By பிடிஐ

நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக அதிபர் பித்யா தேவி பண்டாரி இன்று அறிவித்தார். வரும் ஏப்ரல்-மே மாதம் இடைத்தேர்தல் நடப்பதற்கான தேதிகளையும் பிரதமர் சர்மா ஒளி அறிவித்தார்.

என்சிபி கட்சிக்குள் இரு மூத்த தலைவர்களான பிரதமர் சர்மா ஒளிக்கும், முன்னாள் பிரதமரும் கட்சியின் நிர்வாகக்குழு தலைவரான பிரசண்டாவுக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கடும் அதிகார மோதல் நீடித்து வந்தது. இந்த மோதலின் முடிவு தற்போது ஆட்சிக் கலைப்பில் முடிந்துள்ளது.

பிரதமர் ஒளி தலைமையில் இன்று காலை அவசரமாக அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்துக்குப் பின் நாடாளுமன்றத்தைக் கலைக்கக் கோரி அதிபர் பித்யா தேவி பந்தாரிக்கு, பிரதமர் ஒளி பரிந்துரை செய்துள்ளார். இந்தப் பரிந்துரை தொடர்பாக அதிபரையும், பிரதமர் சர்மா ஒளி சந்தித்துப் பேசியுள்ளார்.

அதன்பின் அதிபர் பண்டாரி, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.

அதிபர் தேவி பண்டாரி வெளியிட்ட அறிவிப்பின்படி, ''நேபாள நடாளுமன்றம் அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 76, உட்பிரிவு 1,7 மற்றும் 85-வது பிரிவின் கீழ் கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. வரும் 2021-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி முதல் கட்டத் தேர்தலும், மே 10-ம்தேதி 2-ம் கட்டத் தேர்தலும் நடைபெறும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன், இந்தியாவின் எல்லைப் பகுதியை இணைத்து நேபாள அரசு புதிய வரைபடத்தை வெளியிட்டது. இதற்கு இந்தியா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவுடன் மோதல் போக்கை பிரதமர் சர்மா ஒளி கடைப்பிடித்து சீனாவுடன் நெருக்கம் காட்டினார்.

ஆனால், பிரதமர் ஒளியின் இந்தச் செயலை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக் குழு கண்டித்தது. இதனால், என்சிபி கட்சியின் கட்சியின் நிர்வாகக் குழுத் தலைவர் பிரசண்டாவுக்கும், பிரதமர் ஒளிக்கும் இடையே கூட்டத்தில் நேரடியாக மோதல் வெடித்தது.

இதையடுத்து, சிலர் அண்டை நாட்டின் உதவியுடன் என் ஆட்சியைக் கலைக்கத் திட்டமிடுகிறார்கள் என்று பிரசண்டா மீது பிரதமர் ஒளி வெளிப்படையாகக் குற்றம் சாட்டினார். இந்தச் சம்பவத்துக்குப் பின் இருவருக்கும் இடையே மோதல் தீவிரமானது. இந்த மோதல் ஆட்சிக் கலைப்பில் முடிந்துள்ளது.

பிரதமர் சர்மா ஒளியின் இந்த முடிவு குறித்து ஆளும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் செய்தித்தொடர்பாளர் நாராயன்காஜி ஸ்ரீஸ்தா கூறுகையில், “பிரதமர் ஒளியின் முடிவு ஜனநாயகத்துக்கு விரோதமானது. அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. சர்வாதிகாரப் போக்கு” எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆளும் என்சிபி கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மாதவ் குமார் நேபாள் கூறுகையில், “ பிரதமர் ஒளியின் இந்த நடவடிக்கை ஜனநாயகத்துக்கு விரோதமானது. கட்சியின் அனைத்துத் தலைவர்களும் பிரதமர் இல்லத்துக்குச் சென்றோம். இந்த முடிவின் விளைவுகள் குறித்து ஆலோசித்தோம்” எனத் தெரிவித்தார்.

என்சிபி கட்சியின் நிர்வாகக் குழுத் தலைவர் பிரசண்டா உள்ளிட்ட மற்ற கட்சியின் தலைவர்களும் பிரதமர் ஒளி இல்லத்துக்குச் சென்று ஆலோசனை நடத்த உள்ளனர்.

பிரதமர் சர்மா ஒளி, நாடாளுமன்றத்தைக் கலைத்துவிடுமாறு அதிபருக்குப் பரிந்துரைத்திருப்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

நேபாள அரசியலமைப்புச் சட்டப்படி, பிரதமருக்குப் பெரும்பான்மை இருந்தால், நாடாளுமன்றத்தைக் கலைக்கப் பரிந்துரை செய்ய எந்த அதிகாரமும் இல்லை. ஆட்சிக் காலம் முடியும் வரை பிரதமர்கள் மாறலாம். ஆனால், ஆட்சியைக் கலைக்க முடியாது என்று அரசியல் சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

இந்தியா

38 mins ago

உலகம்

52 mins ago

வணிகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

4 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்