அந்த வவ்வால்கள் வூஹானில் இல்லை; ஆய்வகத்திலிருந்து தப்பித்தது கரோனா வைரஸ்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றச்சாட்டு

By பிடிஐ

வவ்வால்களிடம் இருந்து கரோனா வைரஸ் பரவவில்லை, சீனாவின் வூஹான் ஆய்வகத்திலிருந்து கோவிட்-19வைரஸ் தப்பித்துள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வூஹான் நகரில் கரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் ஹூபே மாகாணத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் பரவியது. சீனாவில் இதுவரை 4 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். 88 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.

ஆனால், சீனாவில் ஏற்படுத்திய பாதிப்பைக் காட்டிலும் அமெரிக்காவில் மோசமான பாதிப்பை கோவிட்-19 வைரஸ் ஏற்படுத்தி வருகிறது. இதுவரை அங்கு 37 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். 7 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனியிலும் கரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இதுவரை சீனாவின் வூஹான் நகரில் உள்ள ஈரமான விலங்குகள் சந்தையில் வௌவால்களிடம் இருந்துதான் பரவியதாகக் கூறப்பட்டு வந்தது. சீன அரசும் வௌவால்கள் மூலம் இந்த வைரஸ் பரவியதாகத் தெரிவித்தது. மருத்துவர்களும் அவ்வாறே நம்பி வருகிறார்கள்.

ஆனால், அமெரிக்காவிலிருந்து வெளிவரும் புகழ்பெற்ற நாளேடான தி வாஷிங்டன் போஸ்ட், தி ஃபாக்ஸ் நியூஸ் சேனல் ஆகியவை ரகசியமாகச் சேகரித்த செய்திகளின் அடிப்படையில் சார்ஸ்-கோவிட்-19 வைரஸ் வௌவால்களிடம் இருந்து பரவவில்லை. அது சீனாவின் வூஹான் நகரில் இருக்கும் சீன அரசின் ஆய்வகங்களிலிருந்து கவனக்குறைவாகக் கையாண்டதால் பரவியுள்ளது எனச் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பாக இதுவரை எந்தவிதமான கருத்தையும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவி்க்காமல் இருந்தார். இந்நிலையில் அதிபர் ட்ரம்பிடம் நேற்று கரோனா வைரஸ் சீனாவின் வுஹான் ஆய்வகத்திலிருந்து பரவியதாக செய்திகள் வெளியாகியுள்ளது, அது குறித்து அமெரிக்கா விசாரிக்க தி்ட்டம் இருக்கிறதா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் பதில் அளிக்கையில், “ நாங்கள் தொடர்ந்து அந்த செய்திகளை கவனித்து வருகிறோம், ஏராளமானோரும் இதைக் கவனித்து வருகிறார்கள். நிச்சயம் இது அனைவரையும் சிந்திக்க வைக்கிறது. குறிப்பிட்ட வகை வவ்வால்கள் பற்றித்தான் கரோனா வைரஸோடு தொடர்புபடுத்தி பேசுகிறார்கள்.

ஆனால், அந்த வகை வவ்வால்கள் அந்த பகுதியிலேயே இல்லை. இதை உங்களால் நம்பமுடிகிறதா. அந்த வகை வவ்வால்கள் வுஹானின் ஈரமான விலங்குகள்சந்தையிலும் விற்கப்படவும் இல்லை. சீனா குறிப்பிடும் அந்த குறிப்பிட்ட வகை வவ்வால்கள், அந்த இடத்திலிருந்து 40 மைல்களுக்கு அப்பால்தான் வசிக்கின்றன.

இந்த விஷயத்தில் ஏராளமான புதிரான சம்பவங்கள் நடந்துள்ளன இதுதொடர்பாக விசாரணைகள் நடந்து வருகின்றன. அது என்ன என்பதை கண்டுபிடிப்போம். எங்கிருந்து வேண்டுமானாலும் கரோனா வைரஸ் வந்திருக்கட்டும், சீனாவிலிருந்து கூட வந்திருக்கட்டும், ஆனால் இன்று அந்த வைரஸால் இன்று 184 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

வுஹானில் உள்ள 4-ம் கட்ட அதிநவீன பாதுகாப்பு ஆய்வகங்களுக்கான உதவியை அமெரிக்கா முன்பே நிறுத்திவிட்டது, ஒபாமா அரசு 37 லட்சம் டாலர்கள் நிதியுதவி வழங்கியது. சீனாவுக்கு தொடர்ந்து ஆய்வகங்கள் நடத்த உதவி அளிக்கக் கூடாது என எம்.பி.க்களும், செனட்டர்களும் கேட்டுக்கொண்டதால் அந்த உதவி நிறுத்தப்பட்டது” எனத் தெரிவித்தார்.

ஆனால் ஃபாக்ஸ் நியூஸ் வெளியிட்ட செய்தியில், கரோனா வைரஸ் சீனாவின் வூஹான் நகர ஆய்வுக்கூடங்களிலிருந்து தப்பியதா என்பது குறித்து அமெரிக்கா் அரசு விசாரித்து வருகிறது. அமெரிக்க உளவுத்துறை இதுதொடர்பாக தகவல்களை ரகசியமாகச் சேகரித்து வருகிறது. விரைவில் அதுகுறி்த்த முழுமையான தகவல்கள் வெளியாகும் எனத் தெரிவி்த்துள்ளது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

8 hours ago

ஆன்மிகம்

7 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்