கரோனா- யாருக்கும் அறிமுகம் தேவையில்லாத வார்த்தை. 209 நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸால், 13.6 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 76 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.
பாதிப்பைக் கட்டுப்படுத்த உலக நாடுகளில் ஊரங்குடன் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. அவற்றை மீறினால் அபராதமும் தண்டனையும் விதிக்கப்படுகின்றன.
என்னென்ன நாடுகளில் என்ன மாதிரியான தண்டனைகள் தெரியுமா? (கரோனா பாதிப்பின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.)
அமெரிக்கா
வல்லரசு நாடான அமெரிக்கா கரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடாக மாறியுள்ளது. அங்கே அதிகம் பாதிக்கப்பட்ட நியூயார்க் மாகாணத்தில், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத மக்களுக்கு 38 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.
ஒவ்வொரு மனிதருக்கும் இடையில் 6 அடி இடைவெளி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறுவோருக்கு சிறைத் தண்டனையும் உண்டு.
ஸ்பெயின்
ஸ்பெயினில் அத்தியாவசியத் துறைகள் மட்டுமே தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளன. மருத்துவமனைகள், மருந்தகங்கள், உணவகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் திறந்திருக்கின்றன.
விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு 100 பவுண்டுகளில் இருந்து 6 லட்சம் பவுண்டுகள் வரை அபராதம். அவசரகால நேரத்திலும் போராட்டங்களில் ஈடுபடுவோருக்கு சிறைத் தண்டனை உண்டு.
இத்தாலி
அதீத இழப்புகளைச் சந்தித்த நாடுகளில் இத்தாலியும் ஒன்று. இங்கு வெளியே செல்ல மக்கள், விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யவேண்டும். விதிமீறல்களுக்கு 200 பவுண்டில் தொடங்கும் அபராதம் அதிகபட்சமாக 3 ஆயிரம் பவுண்டுகள் வரை செல்கிறது.
ஜெர்மனி
ஜெர்மனியில் தேசிய அளவிலான ஊரடங்கு இல்லையென்ற போதிலும் இரண்டுக்கும் மேற்பட்ட மக்கள் கூடத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. தண்டனைகளைப் பொறுத்தவரை அந்தந்த மாகாணங்களே முடிவு செய்துகொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேற்கத்திய ஜெர்மன் மாகாணங்களில் 25 ஆயிரம் பவுண்டுகள் வரை அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஃப்ரான்ஸ்
ஃப்ரான்ஸில் பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது, வெளியே செல்ல விரும்புபவர்கள் குறிப்பிட்ட விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து கொண்டு செல்ல வேண்டும். உணவு, உடல்நலம் அல்லது குடும்பத்தினரின் அவசியத் தேவைக்காக வெளியே செல்லலாம்.
மக்கள் கிளம்பும்போதே வீடு திரும்பும் நேரத்தைக் குறிப்பிட வேண்டும். விதிகளை மீறினால் 135 பவுண்டுகள் அபராதம். தொடர்ந்து தவறு செய்தால் 200 பவுண்டுகள் செலுத்த வேண்டும். ஒரே மாதத்தில் 4 முறை விதிமீறல் என்றால் 6 மாத சிறைத் தண்டனை.
சீனா
உலக அளவில் முதலில் பாதிக்கப்பட்ட சீனாவில் என்ன மாதிரியான தண்டனைகள் வழங்கப்படுகின்றன என்பது எந்த ஊடகங்களிலும் அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை. விதிமீறல்களுக்கு விநோத தண்டனைகள் வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
பிரிட்டன்
பிரிட்டனில் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கே கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அங்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் 4 காரணங்களுக்காக வெளியே செல்லலாம், உணவு, மருந்துக்கு. அடிப்படை உடற்பயிற்சிக்கு, வீட்டில் கண்டிப்பாக செய்யமுடியாத அலுவலக வேலைகளுக்கு.
பிரிட்டனில் வசிப்போர் விதிமுறைகளைப் பின்பற்ற மறுத்தால் உடனடியாக 60 பவுண்டுகள் அபராதம். மீண்டும் தவறு செய்தால் அதிகபட்சமாக 960 பவுண்டுகள் வரை அபராதம் உண்டு. மேலும் மேலும் தவறிழைக்கும் பட்சத்தில் காவல்துறையினர், வரைமுறையற்ற அபராதம் விதிக்கவும் நீதிமன்றத்தில் நிறுத்தவும் முடியும்.
மெக்சிகோ
மெக்சிகோ நாட்டில் கரோனா அறிகுறிகளுடன் இருப்பவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். அதை மீறுபவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ரூ.2.7 லட்சம் அபராதமும் உண்டு.
தென் ஆப்பிரிக்கா
தென் ஆப்பிரிக்காவின் சொவேட்டோ பகுதியில் இளைஞர்கள் தோப்புக்கரணம் போடவைக்கப்பட்டதாகக் கண்டனங்கள் எழுந்தன. விதிமுறைகளை மீறுபவர்களுக்கு 6 மாத சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படுகிறது.
சவுதி அரேபியா
சவுதி அரேபியாவில் கரோனா குறித்த விதிமுறைகளை மீறுபவர்களுக்கு 10 ஆயிரம் ரியால்கள் (சுமார் 2 லட்சம் ரூபாய்) அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. பயணிகள் தங்கள் உடல்நலன் குறித்த விவரங்களை மறைக்கும்பட்சத்தில் ரூ.98 லட்சம் அபராதமாக விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ்
கரோனா ஊரடங்கு உத்தரவுகளை மீறும் குடிமக்களைச் சுட்டுக்கொல்லுமாறு பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டட்டர்ட்டே உத்தரவிட்டுள்ளார். காவல்துறை மற்றும் ராணுவத்துக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு பலத்த விமர்சனங்கள் எழுந்தன.
இந்தியா
பொதுமக்கள் அநாவசியமாக வீட்டை விட்டு வெளியேற அனுமதி இல்லை. அப்படிச் செய்தால் ஊரடங்கு உத்தரவு மற்றும் பேரிடர் மேலாண்மைச் சட்டப் பிரிவுகளின்படி ஓராண்டு வரை சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளியில் சுற்றித் திரியும் மக்களை, காவல்துறை லத்தி மூலம் எச்சரிக்கிறது. வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. வழக்குகளும் பதிவு செய்யப்படுகின்றன. சில போலீஸார் நூதன தண்டனை அளித்தனர். விதிமுறைகளை மீறிய சிலர் தோப்புக் கரணம் போட்டனர். நின்றபடியே உட்கார்ந்த நிலையில் போஸ் கொடுத்தனர்.
- க.சே.ரமணி பிரபா தேவி | தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
தமிழகம்
49 mins ago
இந்தியா
43 mins ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago