ரோமில் தவித்த 263 இந்திய மாணவர்கள்; வெற்றிகரமாக மீட்ட ஏர் இந்தியா பணியாளர்கள்:  அவர்களுக்கும் மருத்துவ கண்காணிப்பு

By செய்திப்பிரிவு

கரோனா பாதிப்பில் சிக்கியுள்ள இத்தாலியின் ரோம் நகரில் இருந்து 263 இந்திய மாணவர்கள் ஏர் இந்தியா சிறப்பு விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர். அவர்களை தைரியத்துடன் சென்று மீட்டு வந்த ஏர் இந்தியா பணியாளர்கள் தற்போது முன்னெச்சரிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சீனாவில் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் தொடர்ந்து பதற்றமான நிலை தொற்றிக்கொண்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சீனாவில், படிப்படியாகக் குறைந்து வந்தாலும், அதற்கு அடுத்தபடியாக இத்தாலியில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

இந்தியாவிலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் உயிரிழப்பு 5ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் வுகான் நகரை மையமாகக் கொண்டு உருவான கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளுக்கும் பரவி கடும் உயிர்ச் சேதத்தை உருவாக்கியதோடு, மனித இனத்துக்கே பெரும் சவாலாக அமைந்துள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமாக உள்ளது.

குறிப்பாக இத்தாலியில் கோவிட்-19 வைரஸ் காய்ச்சல் அதிவேகமாகப் பரவி வருவதால் அந்த நாடு பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது. நெருக்கடி நிலை அமலில் உள்ளது.

பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.கால்பந்து விளையாட்டுப் போட்டிகள், ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருத்துவப் பொருட்கள் தவிர்த்து பிற பொருட்களுக்கு இத்தாலி அரசு வர்த்தகத் தடை விதித்துள்ளது. சொந்த மக்களையே காப்பற்ற முடியாத நிலையில் இத்தாலியில் வெளிநாட்டினர் பலர் சிக்கிக் கொண்டனர். அவர்கள் பாதுகாக்கவும், அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்கவும் இத்தாலியால் இயலவில்லை.

ரோம் நகரில் இந்தியாவில் இருந்து படிக்கச் சென்ற 263 இந்திய மாணவர்களும் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க இந்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்தது. ஆனால் இத்தாலி கடும் நெருக்கடிக்கு ஆளாகி இருப்பதால் அந்நாட்டிற்கு விமானத்தை அனுப்பவும், அடைத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மாணவர்களை விமான நிலையம் கொண்டு வந்து சேர்த்து அழைத்து வரவும் பெரும் தடங்கல்கள் இருந்தன.

இதனைத் தொடர்ந்து வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இத்தாலிய அரசுடன் தொடர்பு கொண்டு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதன்படி இந்திய மாணவர்களை மீட்பதற்காக ஏர் இந்தியா சிறப்பு விமானம் ரோம் புறப்பட்டுச் சென்றது.

கரோனா பாதிப்பின் உச்சத்தில் இருக்கும் ரோம் நகருக்கு செல்லவும், அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ள இந்திய மாணவர்களை மீட்கவும் ஏர் இந்தியா பணியாளர்கள் தயார் படுத்தப்பட்டனர்.

அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. தேவையான முன்னெச்சரிக்கையுடன் ரோம் சென்ற இந்த விமானம் அங்கிருந்து 263 இந்திய மாணவர்கள் ஏர் இந்தியா டெல்லி வந்தடைந்தது.

டெல்லி விமான நிலைய அதிகாரிகள் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். வெற்றிகரமாக இந்திய மாணவர்களை மீட்டு வந்த ஏர் இந்தியா பணியாளர்களும் தற்போது முன்னெச்சரிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டு கண்காணி்ப்பில் வைக்கப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

ஜோதிடம்

8 hours ago

மேலும்