இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா இந்தியப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அந்நாட்டு அரசு வியாழக்கிழமை அறிவித்தது.
குறிப்பாக, ராணுவம் வசப்படுத்தியிருந்த பகுதிகளில் 1000 ஏக்கர் நிலம், இடம்பெயர்ந்த தமிழர்களை மீள்குடியேற்றம் செய்வதற்காக ஒப்படைக்கப்படுவதாக இலங்கை அரசு தெரிவித்தது.
இலங்கையில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட சிறிசேனா முதல் வெளிநாட்டுப் பயணமாக, இம்மாதம் 16-ம் தேதி இந்தியா புறப்படுகிறார்.
இந்த நிலையில், தமிழர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களுக்கு இலங்கை அமைச்சகம் இன்று (வியாழக்கிழமை) ஒப்புதல் அளித்தது. அதுகுறித்து செய்தியாளர்களிடம் அந்நாட்டின் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கூறியது:
பலாலியில் ராணுவ வசம் இருந்த சுமார் 1000 ஏக்கர் நிலத்தை, இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்காக விடுவிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. பாதுகாப்பு அமைச்சரும் அதிபருமான மைத்ரிபால சிறிசேன முன்வைத்த இந்தத் திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
அதன்படி, முதற்கட்டமாக வலிகாமம் கிழக்குப் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட வலவாய் கிராமத்துக்கு 220 ஏக்கர் நிலம் திருப்பி ஒப்படைக்கப்படும். 1,022 குடும்பங்களுக்கு நிலங்கள் வழங்கப்பட்டு, வீடு கட்ட நிதி அளிக்கப்படும். பள்ளி, மருத்துவமனை, கோயில்கள் உள்ளிட்டவை நிறுவப்படும். எஞ்சிய 780 ஏக்கர்களும் போரால் பாதிக்கப்பட்டு தமது நிலங்களை இழந்து வேறு இடங்களில் வாழும் மக்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படவுள்ளது.
போர்க் காலத்தில் ராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த சுமார் 11,639 ஏக்கர் நிலப்பரப்பில் பெருமளவு நிலம் மீண்டும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தற்போது இலங்கை ராணுவப் படை வசம் 6,152 ஏக்கர் நிலம் இருந்து வருகின்றது. தற்போதுள்ள 6,152 ஏக்கர் நிலத்தில் இருந்துதான் குறிப்பிட்ட மீள்குடியேற்றத்துக்காக 1,000 ஏக்கர் நிலத்தை விடுவிக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
மேலும், கிழக்கு மாகாணத்தில் விமானப் படை வசமுள்ள பானம பிரதேச நிலத்தில், தற்போது கட்டிடங்கள் நிறுவப்படவுள்ள 25 ஏக்கர் நிலம் தவிர்த்த ஏனைய பகுதிகளை பொதுமக்களுக்கு வழங்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
அத்துடன், சம்பூர், வவுனியா, கிளிநொச்சி ஆகிய பகுதிகளிலும் மக்களது நிலங்கள் உயர் பாதுகாப்பு வசம் உள்ளன. இவற்றை மகக்ளிடம் திருப்பி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தாம் ஆட்சிக்கு வந்தால் வடக்கு கிழக்கில் தேவையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் ராணுவம் வசமுள்ள நிலங்களை இடம்பெயர்ந்தவர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்படும் என்று அதிபர் சிறிசேனா உறுதி அளித்திருந்தார். அதன் முதற்கட்ட நடவடிக்கையாகவே, வடக்கு மாகாணத்தின் பலாலியில் 1000 ஏக்கர் நிலம் ஒப்படைக்கப்படுகிறது" என்றார் இலங்கை அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்
முக்கிய செய்திகள்
இந்தியா
25 mins ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
ஜோதிடம்
2 hours ago
க்ரைம்
2 hours ago
இந்தியா
2 hours ago
சுற்றுலா
2 hours ago
தமிழகம்
3 hours ago