நடுவானில் மாயமான ஏர்ஏசியா விமானத்தின் உடைந்த பாகங்கள் இந்தோனேசிய கடல் பகுதியில் நேற்று காலை கண்டுபிடிக்கப் பட்டன. இதுவரை 40 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
கடந்த 28-ம் தேதி இந்தோனேசியாவின் சுரபயா நகரில் இருந்து சிங்கப்பூருக்கு 162 பேருடன் ‘ஏர் ஏசியா இந்தோனேசியா’ விமானம் புறப்பட்டது. அந்த விமானத்தில் 156 இந்தோனேசி யர்கள், 3 தென்கொரியர்கள், மலேசியா, பிரான்ஸ், பிரிட்டனை சேர்ந்த தலா ஒருவர் பயணம் செய்தனர்.
பெலித்துங் கடல் பகுதியில் விமானம் பறந்து கொண்டிருந்த போது ஜகார்தா விமான கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட விமானிகள், மோசமான வானிலை காரணமாக சற்று உயரத்தில் பறக்க அனுமதி கோரினர். ஆனால் அதே நேரத்தில் 6 விமானங்கள் அப்பகுதியில் பறந்து கொண்டிருந்ததால் கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அனுமதி அளிக்கவில்லை.
அடுத்த சில நிமிடங்களில் ஏர் ஏசியா விமானம் ரேடாரில் இருந்து மறைந்தது. கடந்த 28, 29-ம் தேதிகளில் பெலித்துங் கடல் பகுதியை இந்தோனேசிய விமானப் படை, கடற்படை வீரர்கள் சல்லடை போட்டு தேடினர்.
மூன்றாவது நாளாக நேற்று காலையும் தேடுதல் பணி தொடர்ந்தது. காலை 10.15 மணி அளவில் களிமந்தான் பகுதி, பங்காலான் பன் கடல் பகுதியில் ‘லைப் ஜாக்கெட்கள்’, விமானத்தின் கதவுகள் மிதப்பதை இந்தோனேசிய ஹெலிகாப்டரின் விமானி கண்டுபிடித்தார்.
உடனடியாக கடற்படை கப்பல்கள் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டன. அந்தப் பகுதியில் இருந்து இதுவரை 40-க்கும் மேற்பட் டோரின் சடலங்கள் மீட்கப் பட்டுள்ளன. இதில் 6 பேரின் உடல்கள் அடையாளம் காணப் பட்டுள்ளன.
இந்தோனேசியா, மலேசியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் 30 கப்பல்கள், 15 விமானங்கள், 7 ஹெலிகாப்டர்கள் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.
இதுகுறித்து இந்தோனேசிய கடற்படை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடல் அலைகள் ஆக்ரோஷமாக இருப்பதால் உடல்கள் சில மைல் தொலைவில் ஆங்காங்கே மிதக்கின்றன. அவற்றை மீட்டு வருகிறோம்.
விமானத்தில் பயணம் செய்த 162 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சுகிறோம், யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை. விமானத்தின் பெரும் பகுதி கடலில் மூழ்கியிருப்பதால் அதனை தேடும் பணியை முடுக்கிவிட்டுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மீட்கப்பட்ட உடல்கள் அருகில் உள்ள பங்காலான் பன் நகருக்கு கொண்டு வரப்படுகின்றன. அங்கு உடல்களை அடையாளம் காண்பதற்காக பயணிகளின் உறவினர்கள் அழைத்துச் செல்லப் பட்டுள்ளனர்.
உயிரிழந்த பயணிகளின் குடும்பங்களுக்கு இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடா, மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மாயமான விமானம் குறித்த தகவல்களை அறிவதற்காக இந்தோனேசியாவின் சுரபயா விமான நிலையம், சிங்கப்பூர் விமான நிலையத்தில் நூற்றுக் கணக்கான உறவினர்கள் திரண்டிருந்தனர்.
அங்குள்ள டி.வி. திரைகளில் விமான பயணிகளின் உடல்கள் மீட்கப்படும் செய்தி ஒளிபரப்பானதை பார்த்ததும் உறவினர்கள் நிலைகுலைந்தனர். பலர் விமான நிலையத்திலேயே மயங்கி விழுந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சுரபயா மேயர் டிரி ரிஸ்மகாரனி மற்றும் அரசு உயரதிகாரிகள் பலர் சுரபயா விமான நிலையத்தில் கூடியிருந்தனர். சோகம் தாங்காமல் கதறி அழுத உறவினர்களுக்கு அவர்கள் ஆறுதல் கூறி தேற்றினர்.
ஏர் ஏசியா விமானத்தை இந்தோனேசியாவை சேர்ந்த விமானி, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த துணை விமானி ஆகியோர் இயக்கினர். அவர்கள் அபாய பகுதியாகக் கருதப்படும் ஜாவா கடல் பகுதியில் விமானத்தை செலுத்தியதால் விமானம் விபத்துக் குள்ளானதாக ஆஸ்திரேலியா வைச் சேர்ந்த விமான போக்குவரத்து துறை நிபுணர் நேல் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியபோது, விமானி களின் தவறினால்தான் விபத்து ஏற்பட்டிருக்கக்கூடும். தொழில் நுட்ப கோளாறுகள் ஏற்படுவதற் கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்று தெரிவித்தார்.
எனினும் விமானத்தின் கருப்பு பெட்டியைக் கண்டுபிடித்த பின்னரே விபத்துக்கான உண்மை யான காரணம் தெரியவரும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
17 mins ago
இந்தியா
24 mins ago
தமிழகம்
22 mins ago
இந்தியா
24 mins ago
வணிகம்
38 mins ago
இந்தியா
38 mins ago
இந்தியா
45 mins ago
இந்தியா
51 mins ago
உலகம்
1 hour ago
சினிமா
4 hours ago
ஓடிடி களம்
1 hour ago
இந்தியா
1 hour ago