ரஷ்யாவின் யாகுடியா கிராமத்தில் வசித்து வந்த 4 வயது கரினா சிகிடோவா, தன் நாய் நைடாவுடன் அருகில் இருந்த காட்டுக்குள் சென்றுவிட்டாள். திரும்பி வருவதற்கு வழி தெரியவில்லை. அந்தக் காட்டில் ஓநாய்களும் கரடிகளும் அதிகம் வசிக்கின்றன. உறைய வைக்கும் குளிர். போதுமான பாதுகாப்பு இன்றி மனிதர்கள் வசிப்பது கடினம். இரவு நேரத்தை பெரிய மரங்களின் வேர்களுக்கு இடையே கழித்தனர் கரினாவும் நைடாவும். அதிகமான குளிரின்போது நைடா, கரினாவின் மேல் படுத்துக்கொண்டு கதகதப்பை அளித்தது. பசிக்கு பெர்ரி பழங்களையும் ஆற்றில் ஓடிய தண்ணீரையும் சாப்பிட்டாள் கரினா. 9 இரவுகள், 9 பகல்களுக்குப் பிறகு மிகப் பெரிய படை ஒன்று கரினாவைத் தேடிக்கொண்டு காட்டுக்குள் வந்து சேர்ந்தது. நைடா எங்கோ ஓடிவிட, கரினாவைத் தூக்கிக்கொண்டு வந்து மருத்துவ மனையில் சேர்த்தனர்.
கரினாவைக் கண்டதும் அவரது அம்மா, ‘‘கரடியும் ஓநாயும் இருக்கும் காட்டுக்குள் எப்படித் தனியா இருந்தே?’’ என்று அழுதுகொண்டே கேட்டார். ‘‘அதெல்லாம் தெரியாது. நைடா கூடவே இருந்தது’’ என்றாள் கரினா. சில நாட்களில் நைடாவும் கரினா வீட்டுக்கு வந்து சேர்ந்தது. ‘‘4 வயது குழந்தை காட்டில் தனியாக வசித்ததை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. இயற்கைச் சூழ்ந்த கிராமத்தில் வசிக்கும் கரினாவுக்குத் தைரியம் இயல்பாகவே இருக்கிறது. நாய் உதவி இல்லாவிட்டால் பிழைத்திருப்பதே கடினம். குழந்தை என்பதால் காட்டின் சூழல் பற்றிய பயம் தெரிந்திருக்கவில்லை’’ என்கிறார் மருத்துவர் ஃபெடோரா. 2 ஆண்டுகளுக்குப் பிறகு கரினாவையும் நைடாவையும் கெளரவிக்கும் விதத்தில் வெண்கலச் சிலை ஒன்றைச் செதுக்கியிருக்கிறார் நிகோலே சோச்சாசோவ்.
ஆஹா! ரியல் ஜங்கிள் புக் ஹீரோ!
பால்டிமோரில் துணிக்கடை வைத்திருக்கிறார் கிறிஸ்டோபர் ஸ்ஹாஃபர். 2012-ம் ஆண்டு ‘ஷார்ப் டிரெஸ்ட் மேன்’ என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார். தன்னுடைய வாடிக்கையாளர்களிடம் இருந்து பழைய கோட், சூட்களை நன்கொடையாகப் பெற்றுக்கொள்கிறார். அவற்றை ஓரளவு புதுத் துணி போல மெருகேற்றிவிடுகிறார். பால்டிமோரில் வசிக்கும் ஏழைகள், சிறையில் இருந்து திரும்பியவர்களுக்கு இலவசமாக உடைகளை வழங்கி வருகிறார். ‘‘ஒருவரின் ஆடையை வைத்துதான் அவரை முதல் பார்வையிலேயே மதிப்பிடுகிறோம். ஏழைகளும் சிறையில் இருந்து வெளிவரும் கைதிகளும் ஒரு நல்ல வேலைக்குச் செல்ல வேண்டும் என்றால், அதற்கு நல்ல துணி அவசியம்.
அவர்களுக்கு ஏற்ற ஆடைகளை அணிவித்து, கம்பீரமாக இண்டர்வியூவுக்கு அனுப்பிவைப்பேன். எங்கள் ஆடைகளை அணிந்து சென்ற எவரும் வேலை கிடைக்காமல் திரும்பியதில்லை. நம்மைப் போன்ற மனிதர்கள் ஏதோ ஒரு காரணத்துக்காகத் தவறு செய்துவிட்டு சிறை சென்று திரும்புகிறார்கள். அவர்களை நாமும் தண்டிக்கக்கூடாது.
அவர்கள் பிறரைப் போல வாழ்வதற்கு என்னால் முடிந்த உதவி இது’’ என்கிறார் கிறிஸ்டோபர். ‘‘நான் 30 ஆண்டுகள் சிறையில் இருந்து திரும்பியவன். என்னைப் பார்த்தாலோ, என் கதையைக் கேட்டாலோ யாருமே வேலை தரமாட்டார்கள். கிறிஸ்டோபர் உதவியால் எனக்கு ஒரு நல்ல வேலை கிடைத்துவிட்டது. உலகத்தையே வென்றது போல அத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்கிறார் ஜான்.
உங்க சேவை தொடரட்டும் கிறிஸ்டோபர்!
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
சினிமா
3 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
5 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
5 hours ago
தமிழகம்
5 hours ago
வாழ்வியல்
6 hours ago
தமிழகம்
6 hours ago
ஆன்மிகம்
5 hours ago
கருத்துப் பேழை
6 hours ago