சீ
ன தொலைக்காட்சியில் வானிலை அறிவிப்பாளராக பணியாற்றி வருகிறார் 44 வயது யாங் டான். கடந்த 22 ஆண்டுகளாக இந்தப் பணியைச் செய்துவரும் இவர், அன்றுபோலவே இன்றும் இளமையாக இருக்கிறார். நீண்ட காலமாக ஒரே பணியைச் செய்துவரும் இவருக்கு, சீனா முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவரது வித்தியாசமான பாணியையும் இளமையையும் பாராட்டும் விதத்தில் வானிலை நிகழ்ச்சித் தயாரிப்பாளர், இவரைப் பற்றி ஒரு வீடியோவை உருவாக்கினார். ‘இளமை தேவதை’ என்று பெயரிட்டு 1996 முதல் 2018-ம் ஆண்டு வரை இவரது தோற்றங்களைத் தொகுத்து சர்வதேச மகளிர் தினத்தன்று வெளியிட்டார். இந்த வீடியோ மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. “நான் சில ஆண்டுகளாக இவரது நிகழ்ச்சியை கவனித்து வருகிறேன். இந்த வீடியோவை பார்த்த பிறகுதான் இவருக்கு 44 வயது என்று தெரிந்தது. என்னால் நம்பவே முடியவில்லை. 22 ஆண்டுகளாக ஒருவர் எப்படி முதுமையடையாமல் இருக்கிறார் என்று ஆச்சரியமாக இருக்கிறது. 22 வயதில் இருந்ததை விட 44 வயதில் இன்னும் இளமையாகவும் அழகாகவும் இருப்பதாகத் தோன்றுகிறது. சரியான நபருக்குக் கிடைத்த அங்கீகாரம்” என்கிறார் லி யாங்.
என்றென்றும் இளமை!
செ
ங்கடலில் ஒரு ரஷ்ய சுற்றுலாப் பயணி குழந்தையைப் பிரசவித்திருக்கிறார்! “கடற்கரையை ஒட்டியுள்ள குடியிருப்பில் இருந்து பார்த்தபோது முதலில் எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஏதோ வித்தியாசமாக நடக்கிறது என்று மட்டும் தோன்றியது. உடனே வீடியோ எடுக்க ஆரம்பித்தேன். அலைகளுக்கு நடுவே ஒரு பெண்ணின் உருவம் தெரிந்தது. அருகில் ஒரு முதியவரும் ஒரு இளைஞரும் இருந்தார்கள். திடீரென்று வயதானவர் கையில் தொப்புள்கொடியுடன் ஒரு குழந்தை இருப்பதைப் பார்த்தவுடன் பரவசமாகிவிட்டேன். இளைஞர் ஒரு டப்பாவில் தொப்புள்கொடியைப் பிடித்தபடி முதியவருடன் கரைக்கு வந்தார். கரையில் ஒரு குழந்தை இவர்களுக்காகக் காத்திருந்தது. பிறந்த குழந்தையைக் கண்டதும் அந்தக் குழந்தை மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தது. முதியவர் குழந்தையைக் கையில் வைத்துக்கொண்டு, தொப்புள்கொடியை அகற்றினார். சிறிது நேரத்துக்குப் பிறகு அலைகளுக்குள் இருந்து தாய் வெளிப்பட்டார். கரையில் இருந்த தன் குடும்பத்துடன் சேர்ந்துகொண்டார். இந்தக் காட்சியைக் கண்டு நான் நெகிழ்ந்து போய்விட்டேன். பிறகு அவர்களிடம் சென்று உரையாடினேன். நீரில் பிரசவிக்க வேண்டும் என்பதற்காகவே அவர்கள் எகிப்துக்கு வந்திருக்கிறார்கள். முதியவர் நீர் பிரசவங்களைக் கையாள்வதில் நிபுணர். பிரசவ வலி வந்தவுடன் மருத்துவர், கணவருடன் கடலுக்குள் சென்றுவிட்டார் அந்தப் பெண். சில நிமிடங்களில் அவருக்குக் குழந்தை பிறந்துவிட்டதாக அந்தத் தாய் சொன்னார். பிரசவத்தை ஒரு குடும்பமே எளிதாக எதிர்கொண்டதையும் புதிதாக வந்த குழந்தையுடன் மகிழ்ச்சியாக இருந்ததையும் விவரிக்க வார்த்தைகளே இல்லை” என்கிறார் ஹடியா ஹான்சி. நீரில் பிரசவம் நடைபெற்றால் தாய்க்குக் குறைவான வலியும் குழந்தைக்குக் குறைவான மன அழுத்தமும் ஏற்படும். எந்தப் பிரச்சினையும் இல்லாத பெண்களே நீர் பிரசவத்தை நாட வேண்டும். எடை அதிகமான பெண்கள் நீரில் பிரசவிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
செங்கடலில் பிரசவித்த தைரியசாலிக்கு வாழ்த்துகள்!
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
இந்தியா
13 mins ago
இந்தியா
17 mins ago
இந்தியா
33 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago