இம்ரான் கானுடன் எதிர்க்கட்சியினர் பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் கலவரத்தை முடிவுக்குக் கொண்டு வர தீர்மானம் இஸ்லாமாபாத் பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு எதிராக நடந்துவரும் கலவரத்தை முடிவுக்குக் கொண்டு வர, இம்ரான் கான் மற்றும் தாஹிர் உல் காத்ரி ஆகியோருடன் நாடாளுமன்ற எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
பாகிஸ்தானில் கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் முறைகேடுகள் மூலம் ஷெரீப் வெற்றி பெற்றதாக தெஹ்ரிக் இ இன்சாப் கட்சித் தலைவர் இம்ரான் கான் குற்றம் சாட்டினார். அதேபோல் அவாமி தெஹ்ரிக் கட்சி தலைவர் தாஹிர் உல் காத்ரியும் பாகிஸ்தானில் புரட்சி ஏற்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். இரு கட்சியினரும் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு எதிராக கடந்த மாதம் 14-ம் தேதி முதல் கடும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் கலவரம் ஏற்பட்டு போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியாயினர். பலர் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை விட்டு விட்டு ஓட மாட்டேன் என்று நவாஸ் ஷெரீப் திட்டவட்டமாகக் கூறி வருகிறார். மேலும் நேற்று நாடாளுமன்ற கூட்டத்தில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஷெரீபுக்கு ஆதரவு அளித்தனர். போராட்டத்துக்குப் பயந்து அவர் பதவி விலக தேவையில்லை என்று எம்.பி.க்கள் கூறினர்.
இந்நிலையில் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர, எதிர்க் கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் குழு, தெஹ்ரிக் இ இன்சாப் கட்சித் தலைவர் இம்ரான் கான் மற்றும் அவாமி தெஹ்ரிக் கட்சி தலைவர் தாஹிர் அல் காத்ரி ஆகியோரை செவ்வாய்க்கிழமை இரவு சந்தித்து பேசியது.இந்தப் பேச்சுவார்த்தை புதன்கிழமையும் நீடித்தது.
பாகிஸ்தான் நாடாளுமன்ற எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஜமாத் இ இஸ்லாமியின் எம்.பி. சிராஜூல் ஹக் தலைமையிலான குழுவினர், முதலில் இம்ரான் கானைச் சந்தித்துப் பேசினர். அப்போது, ‘பாகிஸ்தானில் தற்போது நடந்து வரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர எந்த ஒப்பந்தமாக இருந்தாலும் அதை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி அமல்படுத்த நடவடிக்கை எடுப்போம்’ என்று சிராஜூல் ஹக் உறுதி அளித்தார்.
பின்னர் சிராஜூல் கூறுகையில், ‘எங்கள் கோரிக்கையை இம்ரான் மற்றும் காத்ரி ஆகியோர் ஏற்றுக் கொண்டுள்ளனர். அதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் முடிவெடுக்கும் வரையில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறும்’ என்றார்.
பாகிஸ்தான் மக்கள் கட்சி மூத்ததலைவர் ரெஹ்மான் மாலிக் கூறுகையில், ‘பெரும் திரளான தொண்டர்களுக்கு மத்தியில் எங்களைச் சந்தித்து இம்ரான் பேசியதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்’ என்றார். அவர்
மேலும் கூறுகையில், ‘போராட்டம் நடத்துபவர்கள் மீது அரசு வன்முறையை கையாள்வது கண்டிக்கத்தக்கது. பாகிஸ்தான் முழுவதும் போராட்டம் நடத்துபவர்களை கைது செய்து சிறையில் அடைக்கும் நடவடிக்கையை ஷெரீப் அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.
தெஹ்ரிக் இ இன்சாப் கட்சித் துணைத் தலைவர் ஷா மெமூத் குரேஷி கூறுகையில், ‘ஜனநாயகத்தைக் காப்பாற்றும் நோக்கில் எங்கள் கட்சியின் கருத்துகளை, எதிர்க்கட்சி எம்.பி.க்களிடம் எடுத்துரைத்தோம். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி நல்ல முடிவு எடுக்கப்படும்’ என்றார்.
இதற்கிடையில், நாடாளுமன்றத்தின் அவசர கூட்டம் நேற்று 2-வது நாளாக நடந்தது. அப்போது போராட்ட நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 min ago
இந்தியா
15 mins ago
இந்தியா
42 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
3 hours ago
உலகம்
3 hours ago
இந்தியா
4 hours ago