கூடுதல் கல்விக் கட்டணம் வசூலிப்பதாக புகார்: விழுப்புரம் தனியார் பள்ளியில் விசாரணை

By எஸ்.நீலவண்ணன்

விழுப்புரம் தனியார் பள்ளியில் கூடுதல் கல்வி கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்ததையடுத்து, பயிற்சி ஆட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆகியோர் அப்பள்ளியில் விசாரணை மேற்கொண்டனர்.

கரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்த கல்வியாண்டில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற சூழ்நிலையில், தற்போது கரோனா 2-ம் அலை வேகமெடுத்து பரவி வருவதால், இதுநாள் வரை பள்ளிகள் திறக்கப்படவில்லை.

கரோனா ஊரடங்கினால் பள்ளிகள் திறக்கப்படாத நிலையிலும், கல்வி தொலைக்காட்சி மூலமாகவும், ஆன்லைன் மூலமாகவும் பாடம் நடத்தப்பட்டு வந்தது. இதனிடையே, தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு 70 சதவீத கல்வி கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும், கூடுதல் கட்டணம் கேட்டு மாணவர்களின் பெற்றோர்களை நிர்பந்திக்கக்கூடாது என்றும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், விழுப்புரம் - கிழக்கு புதுச்சேரி சாலையில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக அவர்களின் பெற்றோர் தரப்பில் இருந்து பல்வேறு புகார்கள் எழுந்தன.

இதையடுத்து, ஆட்சியர் அண்ணாதுரையின் உத்தரவின்பேரில் இன்று (ஜூன் 09) உதவி ஆட்சியர் (பயிற்சி) ரூபினா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, விழுப்புரம் கோட்டாட்சியர் (பொறுப்பு) திருமாறன் ஆகியோர், சம்பந்தப்பட்ட அந்த தனியார் பள்ளியில் சுமார் 3 மணி நேரம் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, அப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவச்- மாணவிகளின் எண்ணிக்கை விவரம், கடந்த ஆண்டு கல்வி கட்டணம் செலுத்தப்பட்ட மாணவர்களின் விவரம், கல்வி கட்டணம் பெற்றதற்கான ஆவணங்கள், மற்ற பள்ளிகளிலும், இந்த பள்ளியிலும் ஒவ்வொரு வகுப்புக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டண விவரம் ஆகியவை குறித்து, பள்ளி நிர்வாகிகளிடம் அதிகாரிகள் கேட்டறிந்து விசாரணை மேற்கொண்டனர்.

இது குறித்து, ஆய்வுக்கு சென்ற அலுவலர்களிடம் கேட்டபோது, "மாணவர்களின் பெற்றோர்களிடம் கூடுதல் கல்வி கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பள்ளியில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அடுத்தக்கட்டமாக, மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களிடம் விசாரணை நடத்த உள்ளோம். இந்த விசாரணை முடிந்ததும், அதன் விசாரணை அறிக்கை ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்படும்" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

41 mins ago

வணிகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தொழில்நுட்பம்

3 hours ago

சினிமா

4 hours ago

க்ரைம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

5 hours ago

க்ரைம்

5 hours ago

மேலும்