ஓசூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவி ஸ்வேதாவுக்கு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க சேர்க்கை ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக அரசின் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் ஓசூர் கல்வி மாவட்டத்தில் சேர்க்கை பெற்ற முதல் மாணவியாக ஸ்வேதா சாதனை படைத்துள்ளார்.
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட பஸ்தி பகுதியைச் சேர்ந்தவர் மகிமைதாஸ். இவர் கட்டிட வேலை செய்து வருகிறார். இவருக்கு ஜோதி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். இதில் இரண்டாவது மகளான ஸ்வேதாவுக்குத் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க சேர்க்கை ஆணை கிடைத்துள்ளது.
மாணவி ஸ்வேதா, ஓசூர் காமராஜ் காலனியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்துள்ளார். 2019-20ஆம் கல்வியாண்டில் 12-ம் வகுப்புத் தேர்ச்சி பெற்ற இவர், அதே ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் 208 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பெற்றிருந்தார். தற்போது மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டில் மாணவி ஸ்வேதாவுக்கு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. மாணவி ஸ்வேதாவுக்கு அவரது பெற்றோர்களும், ஆசிரியர்களும், மாணவர்களும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து ஓசூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் லதா கூறும்போது, ''மாணவி ஸ்வேதா நன்கு படிப்பதுடன் ஆசிரியர்களிடம் மரியாதையுடன் நடந்துகொள்வார். எம்பிபிஎஸ் படிக்க வேண்டும் என்ற கனவுடன் கடினமாக உழைத்து வந்த ஸ்வேதா, நீட் தேர்வில் 208 மதிப்பெண்கள் பெற்று கிருஷ்ணகிரி மாவட்ட அளவில் முதலிடமும், தற்போது எம்பிபிஎஸ் சேர்க்கை ஆணையும் பெற்று எங்கள் அரசுப் பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளார். எங்கள் பள்ளியில் நீட் தேர்வுக்கான அரசு ஆன்லைன் பயிற்சி வகுப்பு சிறப்பாக நடைபெற்றது. இதில் 12 மாணவிகள் பயிற்சி பெற்று நீட் தேர்வு எழுதினர்.
தேர்ச்சி பெற்ற 3 பேரில் மாணவி ஸ்வேதாவுக்கு எம்பிபிஎஸ் படிக்க சீட் கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. மாணவி ஸ்வேதா தான் எழுதிய முதல் நீட் தேர்விலேயே வெற்றி பெற்றுள்ளார்'' என்று தெரிவித்தார்.
மாணவி ஸ்வேதா கூறும்போது, ''6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்ததால் உள் ஒதுக்கீட்டில் மருத்துவ இடம் கிடைத்தது. அரசின் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு காரணமாக அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவு சாத்தியமாகி உள்ளது. இதற்காகத் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்'' என்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 min ago
கருத்துப் பேழை
3 hours ago
தமிழகம்
2 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
விளையாட்டு
11 hours ago
இந்தியா
12 hours ago
விளையாட்டு
13 hours ago
இந்தியா
14 hours ago