சேலத்தைச் சேர்ந்த ‘நம்பிக்கை வாசல்’ என்னும் அறக்கட்டளையின் இல்லத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச சதுரங்கப் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு இலவச மாலை நேரப் படிப்பு மையத்தை (பிரீ டியூஷன் சென்டர்) கடந்த பல ஆண்டுகளாக சேலத்தில் உள்ள ‘நம்பிக்கை வாசல்’ அறக்கட்டளை நடத்திவருகிறது. தற்போது புதிய முயற்சியாக சேலம் டேலன்ட் செஸ் அகாடமியுடன் இணைந்து, இலவச சதுரங்கப் பயிற்சி வகுப்புகளை நேற்று முதல் நடத்தத் தொடங்கியுள்ளது.
பயிற்சியை தொடங்கிவைத்துப் பேசிய ‘டேலன்ட் செஸ்’ அகாடமியின் நிறுவனர் சக்திவேல், “வாழ்க்கையோடு தொடர்புடையது சதுரங்கம். சதுரங்கத்தில் சில சிக்கலான சூழல்களை வென்று வெளிவருவதுபோல வாழ்க்கையிலும் வெல்ல முடியும்” என்று கூறினார்.
நிகழ்வில் கலந்துகொண்ட அரசு சித்த மருத்துவர் விவேகானந்தன், “கடின உழைப்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி இந்த மூன்று குணங்களும் கொண்டிருந்தால், வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும் வெற்றி பெறலாம்" என்று பேசினார்.
‘நம்பிக்கை வாசல்’ அறக்கட்டளையின் தலைவர் கவிஞர் ஏகலைவன் பேசும்போது, “கடந்த ஏழு வருடங்களாக இயங்கிவரும் இந்த அறக்கட்டளை அரசுப் பள்ளி மாணவர்களுக்காகவும், மாற்றுத்திறனாளிகளுக்காகவும், விளிம்பு நிலை மனிதர்களுக்காகவும், சாலையோர மக்களின் உணவுத் தேவைகளுக்காகவும் நிறைய முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. அரசுப் பள்ளி மாணவர்களின் ஆளுமை மேம்பாட்டிற்காகவும், விளையாட்டுத் திறனை வளர்த்துக்கொள்வதற்காகவும், புத்திக்கூர்மையை வளர்த்துக்கொண்டு வாழ்க்கையில் உயர்வடைவதற்காகவும் இந்த இலவச சதுரங்கப் பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் நல்ல விளையாட்டு வீரர்கள் உருவாவர் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது” என்று குறிப்பிட்டார்.
பயிற்சியில் பங்குபெற்ற மாணவர்களுக்கு இலவசமாகச் செஸ் போர்டுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் தனிமனித இடைவெளி பின்பற்றப்பட்டதுடன், கலந்து கொண்டவர்களுக்குக் கபசுர குடிநீரும் வழங்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
35 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 min ago
வலைஞர் பக்கம்
41 mins ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
2 hours ago
தமிழகம்
2 hours ago