பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களின் இல்லங்களுக்குச் சென்று பெற்றோர்களிடம் தேர்வின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து அவர்களை தொடர்ந்து சிறப்பு வகுப்புகளுக்கு பள்ளிக்கு அனுப்பி வைக்கும்படி தமிழாசிரியை ஒருவர் வேண்டுகோள் விடுத்து வருகிறார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் குதிரைச்சந்தல் அரசு மேல்நிலைப் பள்ளியின் தமிழ்ப்பாட முதுநிலை ஆசிரியையாகப் பணிபுரிபவர் துரை.மணிமேகலை. இவரது கணவர் அமுதன், கல்வராயன்மலையில் உள்ள பரிகம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.
கடந்த சில தினங்களாக மாணவர்களின் இல்லங்களுக்கு தனது ஒரு வயதுக் குழந்தையுடன் செல்லும் ஆசிரியை மணிமேகலை, அம்மாணவரின் பெற்றோரைச் சந்தித்து, "உங்கள் குடும்பச் சூழல் அனைவரும் அறிந்ததே. இருப்பினும் தற்போது முக்கியமான தருணத்தை மாணவர்கள் கடந்து செல்ல வேண்டிய தருணம். எனவே, மாணவர்களைத் தொடர்ந்து கண்காணித்து, பள்ளிக்கு அனுப்பி வையுங்கள். அவர்கள் உணவு உட்கொள்ளும் போதும் உறங்கும்போதும் உடனிருந்து சிறிது நாட்களுக்குக் கவனித்துக் கொள்ளுங்கள்" என அறிவுரை கூறி வருகிறார். இதன் மூலம் கிராமப்புறத்தைச் சேர்ந்த மாணவர்கள் தற்போது தொடர்ந்து சிறப்பு வகுப்புகளுக்குச் சென்று வருகின்றனர்.
இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வரும் ஆசிரியை மணிமேகலையிடம் கேட்டபோது, "பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு கடந்த வாரம் முடிந்துவிட்டது. இதையடுத்து பெரும்பாலான மாணவர்கள் பள்ளிக்கு வருவதைத் தவிர்ப்பர். இதில் மாணவர்களைக் குறை கூற முடியாது. ஏனெனில் கிராமங்களிலிருந்து வரும் மாணவர்களின் சூழலை நன்கு அறிவேன்.
பெற்றோர்கள் வேலைக்குச் சென்றுவிடுவர். பிள்ளைகளை கவனிக்கக் கூட முடியாத சூழலில் அவர்கள் உள்ளனர். வீட்டில் உள்ள வேலைகளையும் பிள்ளைகளே செய்ய வேண்டும். பெண் பிள்ளையாக இருந்தால், வீட்டில் வேலை இருக்கிறது, வேலைப் பளு காரணமாக தேர்வுக்கு மட்டும் சென்றால் போதும் எனக் கூறி, வீட்டிலேயே இருக்கச் செய்து விடுவர். இது தொடர்பாக சில மாணவ, மாணவியரும் எங்களிடம் கூறி, எங்கள் வீட்டில் வந்து பேசுங்கள் எனக் கேட்டுக் கொண்டனர்.
இதையடுத்து தான் தனிப்பட்ட முறையில் நானே மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று பெற்றோர்களிடம் பேசினேன். அதற்கு நல்ல பலனும் கிடைத்துள்ளது. தற்போது மாணவர்கள் விடுப்பின்றி பள்ளிக்கு வருகின்றனர். இது எனக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இனிவரும் காலங்களில் பெற்றோர்கள் உணர்ந்துகொண்டால் இந்த மாணவர்கள் நல்ல நிலையை அடைய முடியும்" என்றார்.
முக்கிய செய்திகள்
சினிமா
57 mins ago
க்ரைம்
55 mins ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
1 hour ago
க்ரைம்
2 hours ago
சுற்றுச்சூழல்
2 hours ago
இந்தியா
2 hours ago
சினிமா
3 hours ago
இந்தியா
3 hours ago