புதுச்சேரி மாநிலங்களவை எம்பி தேர்தல் மனுத்தாக்கல் இன்று நிறைவடையும் சூழலில், தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவுக்கு இந்த இடம் ஒதுக்கப்பட்டு முன்னாள் நியமன எம்எல்ஏ செல்வகணபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி மாநிலங்களவை எம்பி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று நிறைவடைகிறது. ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி கூட்டணியின் சார்பில் நேற்று வரையில் யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை.
ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையில் மாநிலங்களவை எம்பியை பெறுவதில் போட்டி நிலவியது. பாஜக தரப்பில் எம்பி பதவியைப் பெற அமைச்சர் நமச்சிவாயம் டெல்லியில் முகாமிட்டு, அரசியல் தலைவர்களை சந்தித்து காய்களை நகர்த்தி வந்தார்.
இதைத் தொடர்ந்து முதல்வர் ரங்கசாமியிடம் பாஜக தலைமை நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இதையடுத்து மாநிலங்களவை எம்பி பதவியை பாஜகவுக்கு தர முதல்வர் ரங்கசாமி சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து முதல்வர் ரங்கசாமி, நேற்று பிற்பகல் ஆளுநர் மாளிகை சென்று ஆளுநர் தமிழிசையை சந்தித்து 10 நிமிடங்கள் பேசினார்.
இதுபற்றி என்.ஆர்.காங்கிரஸ் உயர் தலைவர்கள் தரப்பில் விசாரித்தபோது, “பாஜகவுக்கு எம்பி பதவியை விட்டு தந்துள்ளோம்” என்று குறிப்பிட்டனர்.
ஆர்எஸ்எஸ் பின்புலம்..
இந்நிலையில் டெல்லி மேலிடம் நேற்று இரவு புதுச்சேரிக்கான மாநிலங்களவை முன்னாள் நியமன எம்எல்ஏவும், கல்வியாளருமான செல்வகணபதியை பாஜக வேட்பாளராக அறிவித்தது. இவர் தற்போது புதுச்சேரி பாஜக பொருளாளராக உள்ளார். ஆர்எஸ்எஸ் பின்புலம் உள்ள இவர், வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 64 வயதான இவர் லாஸ்பேட்டையை சேர்ந்தவர். கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
வெற்றிவாய்ப்பு பிரகாசம்
புதுவை சட்டப்பேரவை வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் கடந்த தேர்தலில் 6 சுயேச்சை எம்எல்ஏக்கள் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற 6 எம்எல்ஏக்களில் அங்காளன், சிவசங்கர், கொல்லப்பள்ளி சீனிவாச அசோக் ஆகிய 3 பேர் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். எஞ்சிய 3 சுயேச்சைகளான சிவா, நேரு, பிரகாஷ்குமார் ஆகியோர் என்.ஆர்.காங்கிரஸுக்கு ஆதரவாக இருக்கின்றனர்.
சட்டப்பேரவையில் பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் உள்ளதால் இரு தரப்பில் இருந்தும் ஆதரவு பெற்ற வேட்பாளராக பாஜகவின் செல்வகணபதி நிறுத்தப்படுவதால், அவர் போட்டியின்றி வெற்றி பெற வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. புதுச்சேரியில் இருந்து பாஜக சார்பில் மாநிலங்களவைக்கு ஒருவர் தேர்வு செய்யப்படுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
16 mins ago
விளையாட்டு
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
8 hours ago
விளையாட்டு
9 hours ago
இந்தியா
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
11 hours ago