கரோனா பேரிடரில் இருந்து மக்களின் இயல்பு வாழ்க்கை விரைந்து திரும்ப கட்சிகளைக் கடந்து மக்களின் பிரதிநிதிகளாக செயல்படுவோம் என்று புதிதாக பொறுப்பேற்ற சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் நேற்று தற்காலிக தலைவர் கு.பிச்சாண்டி முன்னிலையில் பொறுப்பேற்றனர். இதைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோள்:
தமிழகத்தின் 16-வது சட்டப்பேரவையில் உறுப்பினர்களாக பொறுப்பேற்றுக் கொண்ட மக்கள் பிரதிநிதிகள் அனைவருக்கும் முதல்வர் என்ற முறையில் எனது வாழ்த்துகள். இந்திய ஒன்றியம் முழுவதும் கரோனா தொற்றின் 2-வது அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழகத்திலும் அதன் தாக்கம் கடுமையாகஇருப்பதை நாம் அனைவரும் உணர்ந்துள்ளோம். இந்தப் பேரிடரில் இருந்து மக்களை பாதுகாப்பதே அரசின் முதன்மையான பணி.
போர்க்கால அடிப்படையில்..
நிலைமையை முழுமையாககட்டுக்குள் கொண்டு வருவதற்கும் மக்களுக்கு ஏற்படும் நெருக்கடியை தவிர்ப்பதற்கும் அரசு முழுமையான அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகிறது. அரசுத்துறை சார்ந்த அதிகாரிகள், முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனையின் அனைத்துஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல் துறையினர், ஊடகம், பத்திரிகைத் துறையினர் என பல தரப்பினரும் கரோனா தொற்றில் இருந்து மக்களைக் காக்கும் பணியில் தன்னலம் கருதாமல் செயலாற்றி வருகின்றனர்.
அரசின் முயற்சிக்கு உதவிக் கரம்
சமூக நல ஆர்வலர்கள், பொதுநல அமைப்பினர், தொழில் நிறுவனத்தினர் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் தமிழக அரசின் முயற்சிகளுக்கு துணை நின்று உதவிக்கரம் அளித்து வருகின்றனர்.16-வது சட்டப்பேரவையில் உறுப்பினர்களாக பொறுப்பேற்றுள்ளவர்கள் தேர்தல் களத்தில் வெவ்வேறு கூட்டணிகளில், வெவ்வேறு கட்சி சார்ந்தவர்களாக களம் கண்டு வெற்றி பெற்றிருந்தாலும், மக்கள் நலம் காப்பதில் ஒருமித்த சிந்தனையுடன் கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் உள்ளது.
எனவே, சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் அவரவர் தொகுதிக்குச் சென்று பேரிடர் காலத்தில் பொதுமக்களுக்கு உதவிகளை மேற்கொண்டு, நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் அரசின் முயற்சிகளுக்கு துணை நிற்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
தங்கள் தொகுதிகளில் கரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஏதேனும் தொய்வு தெரிந்தாலோ, படுக்கை வசதி, ஆக்சிஜன், மருந்து தேவை ஆகியவற்றில் நெருக்கடி இருந்தாலோ அரசின் கவனத்துக்கு விரைந்து கொண்டுவர வேண்டும். எனது தலைமையிலான அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று உத்தரவாதம் அளிக்கிறேன்.
கரோனா பேரிடரில் இருந்து தமிழகத்தை மீட்பதற்கு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, தோழமை கட்சி என்பதை கடந்து மக்களின் பிரதிநிதிகளாக செயலாற்றுவோம். மக்களின் இயல்பு வாழ்க்கை விரைந்து திரும்பிட நாம் அனைவரும் இணைந்து நிற்போம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
9 mins ago
க்ரைம்
3 mins ago
சினிமா
18 mins ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
இந்தியா
41 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago