ஊழல் புகார்கள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டால் முதல்வர் பழனிசாமியுடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயாராக இருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
இந்தியாவிலேயே ஊழலுக்காகச் சிறைக்கு போன முதல்வரைக் கொண்ட, ஊழலுக்காக முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட கட்சி அதிமுகதான். அதிமுக சார்பில் தற்போது முதல்வராக இருககும் பழனிசாமியும் சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்தான். ஆனால், அதிமுக ஆட்சியில் ஊழலே நடக்கவில்லை என்று முதல்வர் பழனிசாமி பேசி வருகிறார்.
அதிமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருக்கின்றன. கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் ஊழல்கள் 2021 மே மாதத்துக்குப் பிறகு முழுமையாக தெரியப் போகிறது. அப்போது முதல்வரும், அமைச்சர்களும் நீதிமன்ற வாசலில் நிற்கத்தான் போகிறார்கள். இதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
எத்தனை வழக்குகள்
திமுகவினர் மீது நில அபகரிப்புப் புகார் என்று ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பப் பேசி வருகிறார் முதல்வர் பழனிசாமி. கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சிதானே இருக்கிறது. 4 ஆண்டுகளாக முதல்வராக பழனிசாமிதான் இருக்கிறார். எத்தனை திமுகவினர் மீது நில அபகரிப்பு வழக்கில் தண்டனை வாங்கிக் கொடுத்துள்ளார். அதிமுக ஆட்சியில் திமுகவினர் மீது பொய் புகார் போடப்பட்டது நிரூபிக்கப்பட்டு, சிறப்பு நீதிமன்றங்களே கலைக்கப்பட்டது என்பதுதான் வரலாறு.‘என்னுடன் நேருக்கு நேர் ஊழல் பற்றி விவாதிக்கத் தயாரா?’ என்று முதல்வர் பழனிசாமி எனக்கு சவால் விடுத்துள்ளார். அந்த சவாலை நான் ஏற்கத் தயார். அதற்கு முன்னர் முதல்வர் சில நடவடிக்கைகளைச் செய்து முடிக்க வேண்டும். ‘நெடுஞ்சாலைத் துறைஊழல் மீதான சிபிஐ விசாரணைக்கு விதித்த தடையை உடனே நீக்குங்கள். நான் வழக்கை சந்திக்கத் தயார்’ என்று உச்ச நீதிமன்றத்தில் முதல்வர் உத்தரவு வாங்க வேண்டும். அமைச்சர்கள் மீது கொடுத்துள்ள ஊழல் புகார்களை விசாரிப்பதற்கு அனுமதி வழங்குங்கள்’ என்று அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரிடம் உடனே ஒப்படைக்க வேண்டும்.
ஆளுநருக்கு கடிதம்
அதுபோல ‘வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக என் மீது கொடுக்கப்பட்டுள்ள ஊழல்புகாருக்கும் நானே அனுமதி தருகிறேன். விசாரணைக்கு உத்தரவிடுங்கள்’ என்று ஆளுநருக்கு கடிதம் எழுதுங்கள். அடுத்த நிமிடமே விவாதத்துக்கு தேதி குறியுங்கள்; எந்த இடம் என்று சொல்லுங்கள். அந்த இடத்துக்கு நான் மட்டும் வருகிறேன். உங்கள் தரப்பில் நீங்களும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சரவை சகாக்கள் அனைவரும் வாருங்கள். விவாதிக்க நான் தயாராக இருக்கிறேன்.இவ்வாறு அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
உலகம்
1 hour ago
ஆன்மிகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
கருத்துப் பேழை
3 hours ago