வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு கோரி சென்னையில் பாமகவினர் போராட்டம் நடத்தினர். வெளி மாவட்டங்களில் இருந்து வந்த கட்சியினரை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், சென்னையின் பிரதான சாலைகளில் போக்குவரத்து முடங்கியது. பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கோரி தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக மற்றும் வன்னியர் சங்கம் அறிவித்திருந்தன.
அதன்படி, முதல்கட்ட போராட்டம் சென்னை பல்லவன் இல்லம் அருகே நேற்று நடத்தப்பட்டது. பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமையில் நடந்த போராட்டத்தில் கட்சியின் இளைஞர்அணி தலைவர் அன்புமணி, இணை பொதுச் செயலாளர் (வடக்கு) ஏ.கே.மூர்த்தி, வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர். அப்போது பேசிய அன்புமணி, ‘‘இந்த இடஒதுக்கீடு போராட்டம் அரசியலுக்காகவோ, தேர்தலுக்காகவோ நடத்தப்படவில்லை. இது வன்னியர்களின் உரிமைப் போராட்டம்’’ என்றார்.
சென்னையில் நேற்று நடந்த போராட்டத்தில் பங்கேற்பதற்காக விழுப்புரம், திருவண்ணாமலை, தருமபுரி, கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பேருந்து, வேன் உள்ளிட்டவாகனங்களில் ஏராளமானோர் வந்தவண்ணம் இருந்தனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 78 இடங்களில் ஆங்காங்கேஅவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
தாம்பரம் அடுத்த பெருங்களத்தூரில் வாகனங்களை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் ஜிஎஸ்டி சாலையை மறித்து பாமகவினர் போராட்டம் நடத்தினர். கிழக்கு தாம்பரம் - வேளச்சேரி சாலையில் சேலையூர் காவல் நிலையம் அருகிலும் மறியலில் ஈடுபட்டனர். இதேபோல, பல்வேறு இடங்களில் மறியல் போராட்டத்தில் பாமகவினர் ஈடுபட்டனர். 4 மணி நேரத்துக்கு மேலாக சாலை மறியல் நடைபெற்றதால் ஜிஎஸ்டி சாலை, வேளச்சேரி பிரதான சாலை உள்ளிட்ட பல்வேறு முக்கிய சாலைகளிலும் போக்குவரத்து முடங்கியது. வாகனங்கள் பல கி.மீ. தூரத்துக்கு நின்றன. இதனால், குறித்தநேரத்தில் அலுவலகம், மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாமல் பலரும் அவதிப்பட்டனர். ஆங்காங்கே ஆம்புலன்ஸ் வாகனங்களும் வாகன நெரிசலில் சிக்கிக் கொண்டன.
முதல்வருடன் சந்திப்பு
பின்னர் செய்தியாளர்களிடம் அன்புமணி கூறியபோது, ‘‘தமிழகத்தில் 4-ல் ஒரு பங்கு உள்ள வன்னியர்கள் சமூகத்திலும், கல்வி, வேலைவாய்ப்பிலும் மிகவும் பின்தங்கியுள்ளனர். 40 ஆண்டுகால கோரிக்கைக்காக எம்ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதாவை சந்தித்தோம். தற்போது முதல்வர்பழனிசாமியையும் சந்தித்துள்ளோம்’’ என்றார்.
ரயில் மீது பாமகவினர் கற்களை வீசியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘‘பாமகவினர் அதுபோல செய்யவில்லை’’ என்றுஅன்புமணி கூறினார். ‘‘அவர்கள் பாமக கொடி, டி-சர்ட் அணிந்திருப்பது புகைப்படங்கள், வீடியோக்களில் தெரிகிறதே’’ என்று செய்தியாளர்கள் கேட்க, பதில் சொல்லாமல் செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே முடித்துவிட்டு அன்புமணி கோபத்துடன் புறப்பட்டுச் சென்றார்.
அன்புமணி மீது வழக்கு பதிவு
சட்டவிரோதமாக கூடுதல், அரசு அதிகாரியின் உத்தரவுக்கு கீழ்ப்படியாமல் ஆர்ப்பாட்டம் நடத்துதல், தொற்றுநோய் பரப்பும் வகையில் கவனக்குறைவாக நடந்துகொள்ளுதல் ஆகிய 3 பிரிவுகளில் ஜி.கே.மணி, அன்புமணி, ஏ.கே.மூர்த்தி உட்பட 850 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 78 இடங்களில் போராட்டங்கள் நடத்தியதாக கைது செய்யப்பட்ட 2,500 பேர் மாலையில் விடுவிக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.தாம்பரம் ரயில் நிலைய மேலாளர் கொடுத்த புகாரின்பேரில், ரயில் நிலையம், ரயில் செல்லும் பாதையில் அத்துமீறி நுழைந்தது, ரயிலை மறித்தது, ரயில் மீது கற்களை வீசி சேதப்படுத்தியது, தண்டவாளத்தில் மரம், இரும்பு தடுப்புகளை வைத்து இடையூறு செய்தது தொடர்பாக 350 பேர் மீது ஆர்பிஎஃப் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
4 hours ago
தமிழகம்
4 hours ago
சினிமா
5 hours ago
தொழில்நுட்பம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
சுற்றுச்சூழல்
6 hours ago
விளையாட்டு
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
கல்வி
6 hours ago
சுற்றுச்சூழல்
6 hours ago
தமிழகம்
7 hours ago