தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்கப்படும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கட்டணத்தை திமுக ஏற்கும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வையும், சமூகநீதிக் கொள்கையின் அடிப்படையையும் வெளிப்படுத்தும் வகையில் ‘நீட்’ தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றின. அதை மத்திய அரசிடம் உரிய வகையில் வலியுறுத்திச் செயல்படுத்தும் வலிமையும், அக்கறையுமற்ற அதிமுக அரசால் அரியலூர் அனிதா தொடங்கி ஆண்டுதோறும் பல மாணவர்களின் உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலைமை ஏற்படுகிறது. அதனால்தான் திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.
நீட் தேர்வால் ஒட்டுமொத்த தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவு சிதறடிக்கப்பட்ட நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீட்டை அதிமுக அரசு அறிவித்தது. அதிலும்கூட, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு பரிந்துரைத்த 10 சதவீத உள் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தாமல் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தினர். அந்த மசோதாவுக்கும் ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலதாமதம் செய்ததால் திமுக போராட்டம் நடத்தியது. இந்த போராட்டத்தாலும், உயர் நீதிமன்றத்தின் கண்டிப்பாலும் தற்போது அது செயல்வடிவம் பெற்றுள்ளது.
நீட் தேர்வில் மதிப்பெண்கள் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின்படி, அரசு மருத்துவக் கல்லூரிகளில் 227 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள இடங்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதற்குரிய கட்டணத்தை அரசுப் பள்ளிகளில் பயின்ற ஏழை மாணவர்கள் செலுத்த முடியாத நிலை இருப்பதால், அவர்கள் பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளனர். மாணவர்களும் பெற்றோரும் அதிமுக அரசை நம்பியிருந்த நிலையில், மருத்துவக் கனவு மீண்டும் சிதைக்கப்பட்டு விடுமோ என்ற மனப் பதற்றத்துக்கும் அச்சத்துக்கும் ஆளாகி இருக்கின்றனர்.
அவர்களின் துயர் துடைக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமையாகும் என்பதை நினைவூட்டுகிறேன். அதே நேரத்தில், மாணவர்களின் நலனில் எப்போதும் அக்கறை கொண்டுள்ள திமுக, இந்த கல்வியாண்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்டுள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவப் படிப்புக்குரிய கட்டணத்தை முழுமையாக ஏற்கும்.
சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு அமையவிருக்கிற திமுக ஆட்சியில் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வதற்குரிய சட்ட நடவடிக்கைகள் உறுதியாக மேற்கொள்ளப்பட்டு, அரசுப் பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி, கிராமப்புற, பின்தங்கிய, ஒடுக்கப்பட்ட சமூகங்களை சேர்ந்த அனைத்து மாணவர்களின் மருத்துவக் கனவும் நிச்சயமாக நிறைவேறும் என்ற உறுதியை இப்போதே வழங்குகிறேன்.
இவ்வாறு அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
வணிகம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
தொழில்நுட்பம்
5 hours ago
சினிமா
6 hours ago
க்ரைம்
6 hours ago
விளையாட்டு
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
இந்தியா
7 hours ago
க்ரைம்
7 hours ago