கவுந்தப்பாடியில் 63.8, நாமக்கல்லில் 43 மி.மீ மழை பதிவு :
ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், கவுந்தப்பாடியில் அதிகபட்சமாக 63.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. காலை வேளையில் வெயிலும், மாலை மற்றும் இரவில் இடியுடன் கூடிய மழையும் பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. மழையளவு விவரம் மில்லி மீட்டரில்:
கவுந்தப்பாடி 63.8, எலந்தைக் குட்டை மேடு 26, மொடக்குறிச்சி 18, கோபி 12, அம்மாபேட்டை 11, குண்டேரிப் பள்ளம் 10, நம்பியூர் 9, பவானிசாகர் 6.
பவானிசாகர் அணை
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியாக நீடித்து வரும் நிலையில், நேற்று மாலை நிலவரப்படி அணைக்கு விநாடிக்கு 4417 கனஅடி நீர் வரத்து இருந்தது. தடப்பள்ளி - அரக் கன்கோட்டை பாசனப்பகுதிக்கு 200 கனஅடியும், கீழ்பவானி பாசனத்துக்கு 2300 கனஅடியும் நீர் திறக்கப்படுகிறது. பவானி ஆற்றில் உபரி நீராக விநாடிக்கு 1900 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
நாமக்கல்லில் மரங்கள் முறிந்தன
நாமக்கல் மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று முன்தினம் மாலை நாமக்கல் மாவட்டம் முழுவதும் பலத்த காற்றுடன் பெய்த மழையால் நாமக்கல் - திருச்சி சாலை, மேய்க்கால்நாயக்கன்பட்டி உள்ளிட்ட இடங்களில் சாலை யோரம் இருந்த மரங்கள் முறிந்து விழுந்தன. அவற்றை நெடுஞ்சாலைத் துறையினர் உடனடியாக அகற்றினர். அதேவேளையில் தொடர் மழையால் நாமக்கல் மாவட்டத்தில் விளைநிலங்களின் ஆதாரமாக உள்ள நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இது பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நாமக்கல் மாவட்டத்தில் பெய்த மழையளவு விவரம்(மி.மீ.,): நாமக்கல் 43, எருமப்பட்டி 20, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 19.50, மோகனூர் 14, கொல்லிமலை செம்மேடு 6, திருச்செங்கோடு 5, சேந்தமங்கலம் 2.