கனமழையால் பாதிக்கப்பட்ட செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மீட்பு, நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் வெளியே வரமுடியாமல் தவித்தனர். இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், 6 நாட்களுக்குப் பிறகு மழை ஓய்ந்து நேற்று லேசாக வெயில் அடித்தது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் தேங்கிய நீரை மோட்டார் பம்ப் மூலம் அகற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தினமும் பார்வையிட்டு ஆய்வுசெய்து வருகிறார். அதன்படி, நேற்று 6-வது நாளாக ஆய்வுப்பணியை முதல்வர் மேற்கொண்டார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை, காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை மற்றும்அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கடந்த நவ.7 முதல் முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி, கனமழையால் பாதிக்கப்பட்ட செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று 6-வது நாளாக பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
செங்கல்பட்டு மாவட்டம் பள்ளிக்கரணை ரேடியல் ரோடு, நாராயணபுரம் ஏரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை பார்வையிட்ட முதல்வர், மாம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமுக்கு சென்றார்.அங்கு, வண்டலூர் வட்டத்துக்குப்பட்ட கிராமங்களில் வசிக்கும் இருளர், பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த 33 குடும்பங்களுக்கு கீழ்க்கோட்டையூர் கிராமத்தில் உள்ள நிலத்தில் இலவச வீட்டுமனைப் பட்டாக்களை முதல்வர் வழங்கினார். மேலும், முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்குஉணவு, நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
ஆய்வுக்கு செல்லும் வழியில், கீழ்கோட்டையூரில் உள்ள தேநீர் கடையில் தேநீர் அருந்திய முதல்வர், அங்கிருந்தவர்களிடம் கலந்துரையாடினார். கண்டிகையில் தூய்மைப் பணியாளர்களை சந்தித்து, நலம் விசாரித்து, தேவைப்படும் உதவிகள் குறித்து கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆதனூர், அடையாறு ஆறு தொடங்கும் இடம், மண்ணிவாக்கம் ஆகிய பகுதிகளை முதல்வர் பார்வையிட்டார். அடையாறு ஆற்று பாலத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள நீர்வரத்தையும் ஆய்வு செய்தார். முடிச்சூர் சிஎஸ்ஐ செயின்ட் பால்ஸ் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம் மற்றும் மருத்துவ முகாமை பார்வையிட்ட முதல்வர், முடிச்சூர் டோல்கேட் அருகில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, நிவாரணப் பொருட்களை வழங்கினார். முடிச்சூர் மதனபுரத்தில் கனமழையால் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரில் இறங்கி நடந்த முதல்வர், வெள்ளநீர் அகற்றும் பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிட்டார்.
இறுதியாக, தாம்பரம் பேருந்து நிலையத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட முதல்வர், தூய்மைப்பணியாளர்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
முதல்வருடன் இந்த ஆய்வில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கபாண்டியன், போக்குவரத்துத் துறை செயலர் கே.கோபால், ஊரக வளர்ச்சித் துறை செயலர் பி. அமுதா, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், காஞ்சிபுரம் ஆட்சியர் மா.ஆர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, சென்னை தேனாம்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட கணேசபுரம் தெருவில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணிகளை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி நேற்று பார்வையிட்டார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு, நிவாரணப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மழைநீர் தேங்கிய பகுதிகளில் அதிக குதிரைத் திறன் கொண்ட 563 பம்புகளை பயன்படுத்தி, நீரை வெளியேற்றும் பணி நடக்கிறது. மாநகராட்சிக்குட்பட்ட 12 சுரங்கப்பாதைகளில் தேங்கிய மழைநீர் வெளியேற்றப்பட்டு போக்குவரத்து சீர்செய்யப்பட்டது. மழைநீர் வடிந்த பகுதிகளில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்ற மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அப்பகுதியில் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.
டெல்டாவில் இன்று ஆய்வு
டெல்டா மாவட்டங்களில் மழை பாதிப்புகளை முதல்வர் இன்று பார்வையிடுகிறார். கடலூர் மாவட்டம் அரங்கமங்கலம், அடூர் அகரம்,மயிலாடுதுறை மாவட்டம் இருக்கூர், தரங்கம்பாடி, நாகப்பட்டினம் மாவட்டம் கருங்கனி, அருந்தவபுலம், திருவாரூர் மாவட்டம் ராயநல்லூர், புழுதிக்குடி, தஞ்சாவூர் மாவட்டம் பெரியக்கோட்டை ஆகியபகுதிகளில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு நிவாரணம் வழங்குகிறார்.முக்கிய செய்திகள்
விளையாட்டு
47 mins ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
3 hours ago
வணிகம்
4 hours ago
விளையாட்டு
4 hours ago
இணைப்பிதழ்கள்
4 hours ago
க்ரைம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
உலகம்
7 hours ago
இந்தியா
8 hours ago