முதல்வர் செல்லும் பாதை உட்பட - சாலைகளில் பெண் போலீஸாரை நிறுத்த வேண்டாம் : காவல்துறையினருக்கு டிஜிபி திரிபாதி வாய்மொழி உத்தரவு

By செய்திப்பிரிவு

முதல்வர் செல்லும் பாதை உட்பட பந்தோபஸ்த்துக்காக சாலைகளில் பெண் போலீஸாரை பாதுகாப்புக்கு நிறுத்த வேண்டாம் என்று டிஜிபி ஜே.கே.திரிபாதி வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

எம்ஜிஆர் ஆட்சிக் காலத்துக்கு பிறகு, தமிழகத்தில் முதல்வருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டன. முதல்வர் செல்லும் சாலைகளில் வழியெங்கும் போலீஸார் மணிக்கணக்கில் நிறுத்தப்பட்டனர்.

குறிப்பாக, சாலைகளில் பாதுகாப்புக்காக நிறுத்தப்படும் பெண் போலீஸார் இதனால் மிகவும் சிரமப்பட்டனர். குடிநீர், உணவு கிடைக்காமல், இயற்கை உபாதைக்கு ஒதுங்க முடியாமல் பெரிதும் அவதிக்கு ஆளாகினர். இதுபோன்ற பணிகளில் இருந்து பெண் போலீஸாருக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலுத்து வந்தது.

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கும் இக்கோரிக்கை சென்றது. இதையடுத்து, முதல்வர் செல்லும் பாதைகள் உட்பட சாலைகளில் பாதுகாப்புக்காக பெண் காவலர்களை நிறுத்த வேண்டாம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதன்பேரில், பெண் காவலர்களை சாலைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டாம் என டிஜிபி ஜே.கே.திரிபாதி வாய்மொழி உத்தரவாக கூறியிருக்கிறார்.

சாலை மறியல், போராட்டம் நடந்தால் அதில் ஈடுபடும் பெண்களை பெண் காவலர்கள் மட்டுமே கையாள வேண்டும் என்ற விதி உள்ளது. பெண் போலீஸாரை பணியில் ஈடுபடுத்தாவிட்டால், சாலைகளில் பெண் போராட்டகாரர்களால் பிரச்சினை ஏற்படும்போது, யார் கையாள்வது என்கிற சிக்கல் உள்ளது.

அதேபோல, பல காவல் நிலையங்களில் பெண் ஆய்வாளர்கள், பெண் உதவி ஆய்வாளர்கள் பணியில் உள்ளனர். முதல்வர் செல்லும் பாதையில் அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடாமல் இருக்க முடியாது. இதுபோன்ற நடைமுறை சிக்கல்கள் இருப்பதால், ஆணையாக வழங்கப்படாமல் வாய்மொழியாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று காவல் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

உலகம்

5 hours ago

வாழ்வியல்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

8 hours ago

க்ரைம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்