தமிழ்த்தாய் வாழ்த்து இறை வணக்கப் பாடல்தான். தேசிய கீதம் அல்ல. தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்று எந்தவித சட்டப்படியான, நிர்வாக ரீதியான உத்தரவும் இல்லை என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
சென்னையில் உள்ள மியூசிக்அகாடமியில் 24.1.2018-ல் நடைபெற்ற தமிழ் - சம்ஸ்கிருத அகராதி வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்ததாக புகார் எழுந்தது.
காஞ்சி மடம் மேலாளர் புகார்
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ராமேசுவரம் காஞ்சி மடத்துக்குள் கண்.இளங்கோ (இப்போது நாம் தமிழர் கட்சியில் உள்ளார்) தலைமையில் தமிழர் தேசிய முன்னணியைச் சேர்ந்த 12 பேர் நுழைந்து கோஷமிட்டனர். இதுதொடர்பாக கண்.இளங்கோ உட்பட பலர் மீது காஞ்சி மடம் மேலாளர் சுந்தர வாத்தியார் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி கண்.இளங்கோ உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:
தமிழகத்தில் அரசு துறைகள், உள்ளாட்சி அமைப்புகள், கல்வி நிறுவனங்களில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் மனோன்மணீயம் சுந்தரனாரின் ‘நீராருங் கடலுடுத்த’ என்ற பாடலை மோகன ராகத்தில், திஸ்ராதாளத்தில் பாட வேண்டும் என தமிழக அரசு 17.6.1970-ல் உத்தரவிட் டது.
எழுந்து நிற்பது வழக்கம்
தமிழ்த்தாய் வாழ்த்து இறை வணக்கப் பாடல். தேசிய கீதம் அல்ல. தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது அனைவரும் எழுந்து நிற்கவேண்டும் என்று எந்தவித சட்டப்படியான, நிர்வாக ரீதியான உத்தரவும் இல்லை. அதேநேரத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மிக உயர்ந்த மரியாதை வழங்கப்பட வேண்டும். உண்மையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது கூட்டத்தினர் எழுந்து நிற்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.அதேநேரத்தில் இவ்வாறு எழுந்து நின்றுதான் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை செலுத்தவேண்டுமா? என்ற கேள்வி எழுகிறது. பல்வேறு கலாச்சாரங்களை மதிக்கிற, கொண்டாடுகிற நாம்,தமிழ்த்தாய் வாழ்த்துக்கு இப்படித்தான் மரியாதை செலுத்த வேண்டும் என்பது சரியல்ல.
ஆன்மிகவாதிகள் தியான நிலை
ஆன்மிகவாதிகள் பிரார்த்தனையின்போது தியான நிலையில் இருப்பார்கள். தமிழ்த்தாய் வாழ்த்து இறைவணக்கப் பாடல்என்பதால், அந்தப்பாடல் இசைக்கப்படும்போது ஆன்மிகவாதிகள் தியான நிலையில் இருப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் தியான நிலையில் கண்களை மூடிய நிலையில் இருந்துள்ளார். தாய்மொழி தமிழுக்கு, அவர் அவரது வழியில் உரிய மரியாதை செலுத்தியுள்ளார்.இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரர் மற்றும் புகார்தாரர் இடையே சமரசம் ஏற்பட்டுள்ளது. இதனால் வழக்கை தொடர்ந்து நடத்துவதால் பலனில்லை. வழக்கு ரத்து செய்யப்படுகிறது. இந்த உத்தரவு வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பொருந்தும்.
இவ்வாறு நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
இந்தியா
6 hours ago
வாழ்வியல்
7 hours ago
இந்தியா
8 hours ago
விளையாட்டு
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
சினிமா
10 hours ago
இந்தியா
10 hours ago