அமைச்சராக செந்தில்பாலாஜி தொடர்ந்தால் நியாயமான விசாரணை எப்படி நடக்கும்? - அண்ணாமலை கேள்வி

By செய்திப்பிரிவு

சென்னை:"செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம் செய்ய வேண்டும். அவர் மீதான ஊழல் தடுப்பு விசாரணை, நேர்மையாக நடைபெறுவதை தமிழக முதல்வர் உறுதி செய்ய வேண்டும்" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத் துறை தொடர்ந்த மேல் முறையீட்டு மனு வழக்கில், அமைச்சர் செந்தில்பாலாஜி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்து, இரண்டு மாதங்களில் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் என்று தமிழக காவல் துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2014-ஆம் ஆண்டு, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, லஞ்சம் வாங்கி, மோசடி செய்ததாக, அப்போதைய போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த தற்போதைய அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோர், வாங்கிய லஞ்சப் பணத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டதாகக்கூறி, அவர்களுக்கு எதிரான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் 30.7.2021 அன்று உத்தரவிட்டிருந்தது.

இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களின் மீது விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அளித்த தீர்ப்பில், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய எல்லா முகாந்திரங்களும் இருந்தும், தமிழக அரசு அவ்வாறு வழக்குப் பதிவு செய்யாதது அதிர்ச்சியளிக்கிறது என்றும், ஊழல் என்பது அரசுக்கும் சமூகத்திற்கும் எதிரானது. அதனை அனுமதிக்க முடியாது எனக் கூறி அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு செல்லாது என்றும், வழக்கைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் தீர்ப்பளித்திருந்தது.

திமுக அரசில் அதிகாரமிக்க அமைச்சராக வலம்வரும் செந்தில்பாலாஜியை ஊழல் வழக்கிலிருந்து காப்பாற்ற, தமிழக அரசும் காவல் துறையும் இணைந்து செயல்படுவது தெளிவாகத் தெரிகிறது. தன்மீது வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது, அமைச்சரவையில் செந்தில்பாலாஜி தொடருவாரேயானால் நியாயமான விசாரணை எப்படி நடக்கும்?

சட்டவிரோதப் பணப் பரிமாற்ற மோசடி நடந்திருப்பதால், செந்தில்பாலாஜி உள்ளிட்டோரை விசாரிக்க அமலாக்கத் துறை முடிவு செய்திருந்தது. ஆனால், அந்த விசாரணையில் உண்மை வெளிப்பட்டுவிடுமோ என்ற பயத்தில், அமைச்சர் செந்தில்பாலாஜி, அமலாக்கத் துறை விசாரணைக்கு உயர் நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்றார். இதையடுத்து, அமைச்சர் செந்தில்பாலாஜியை விசாரிக்க அமலாக்கத் துறை தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அந்த மனுவின் மீதான விசாரணையில், அமைச்சர் செந்தில்பாலாஜியை ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து இரண்டு மாதங்களில் அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக காவல்துறைக்கு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. மேலும் அமலாக்கத்துறையின் மேல் முறையீட்டு மனுக்களையும் அனுமதித்துள்ளது.

தமிழக அமைச்சராக இருக்கும் ஒருவர் மீது, தமிழக காவல் துறை விசாரணை நடத்துவது என்பது எந்த அளவுக்கு நேர்மையாக நடைபெறும் என்பது கேள்விக்குறி. உடனடியாக செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்றும், அவர் மீதான ஊழல் தடுப்பு விசாரணை, நேர்மையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழக முதல்வரைக் கேட்டுக் கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

19 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

38 mins ago

விளையாட்டு

52 mins ago

சினிமா

1 hour ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்