ஐஎஃப்எஸ் நிதி நிறுவனத்திடம் ரூ.5 கோடி பேரம் - ரூ.32 லட்சம் லஞ்சம் பெற்ற டிஎஸ்பி சஸ்பெண்ட்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை கிண்டியை தலைமை இடமாகக் கொண்டு ஐஎஃப்எஸ் என்ற நிதி நிறுவனம் செயல்பட்டது. இந்நிறுவனத்தில் 2018 முதல் 2022 ஜூலை வரை 84 ஆயிரம் பேர் ரூ.5,900 கோடி முதலீடு செய்தனர். ஆனால், உறுதி அளித்தபடி அந்நிறுவனம் வட்டி கொடுக்கவில்லை. கட்டிய அசல் பணத்தையும் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து சென்னை அசோக்நகரில் உள்ள பொருளாதாரக் குற்றப்பிரிவில் முதலீட்டாளர்கள் புகார் அளித்தனர். அதன்படி, எல்என்எஸ்-ஐஎஃப்எஸ் மற்றும் துணை நிறுவனங்களின் இயக்குநர்கள், முக்கிய ஏஜென்ட்கள் என 5 பேர் கைது செய்யப்பட்டனர். வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 4 இயக்குநர்களைப் பிடிக்க சர்வதேச போலீஸாரின் உதவியை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் நாடியுள்ளனர்.

கைதானவர்கள் மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சொந்தமான 31 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது ரூ.1.12 கோடி ரொக்கம், ரூ.34 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள்,16 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், பல்வேறு வங்கிகணக்குகளில் இருந்த ரூ.121 கோடியே 54 லட்சம் முடக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி கபிலன் நியமிக்கப்பட்டார். இவர் இந்த வழக்கு தொடர்பாக விசாரணையைத் தொடங்கி ஆதாரங்களைத் திரட்டினார். இந்நிலையில், வழக்கில் துப்பு துலக்கி தலைமறைவு நிர்வாகிகளை கைது செய்து சிறையில் அடைப்பதைவிட, அவர்களிடம் லஞ்சம் பெற்று வழக்கை இழுத்தடிக்கலாம் என்ற முடிவுக்கு அவர் வந்ததாகக் கூறப்படுகிறது.

அதன்படி, ஐஎஃப்எஸ் நிதி நிறுவன முக்கிய அதிகாரிகளை ரகசியமாக அழைத்து ரூ.5 கோடி பேரம் பேசியதாகவும், இந்த பணத்தை கொடுத்தால் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்காது. இல்லை என்றால் நடவடிக்கை தீவிரமாகும் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதற்கு ஒப்புக்கொண்டு, முதல்கட்டமாக ரூ.32 லட்சத்தை அவர்கள் கொடுத்ததாகத் தெரிகிறது.

அதன்பிறகு ஐஎஃப்எஸ் நிறுவனம் மீதான நடவடிக்கையில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் புகார் அளித்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஏற்கெனவே, பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்த நிலையில், அப்பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் கூண்டோடு மாற்றப்பட்டு புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அதன்படி நியமிக்கப்பட்டவர்களில் ஒருவர்தான் டிஎஸ்பி கபிலன்.

இதற்கிடையே, வழக்கில் ஏற்பட்ட சுணக்கம் குறித்து உயர் அதிகாரிகள் ரகசிய விசாரணை மேற்கொண்டனர். அதில், ரூ.32 லட்சம் கைமாறியது தெரியவந்தது. இதையடுத்து, குற்றச்சாட்டுக்கு உள்ளான டிஎஸ்பி கபிலனை, சஸ்பெண்ட் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் விசாரணைக்காக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

லஞ்சப் புகாரில் சிக்கிய கபிலன், சென்னை கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள நீலாங்கரையில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டில் அதிரடியாக நுழைந்த பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார், அங்கு கட்டுக்கட்டாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும், சொத்து பத்திரங்கள், முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த விவகாரம் குறித்து லஞ்ச ஒழிப்பு பிரிவுபோலீஸார் மற்றும் அமலாக்கப் பிரிவு போலீஸாரும் விசாரணையில் இறங்க உள்ளனர்.

பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி, பல ஆயிரம் கோடி பணத்தை சுருட்டிய நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீஸாரே அந்த நிறுவனங்களிடமிருந்து லஞ்சம் பெற்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

உலகம்

4 hours ago

வாழ்வியல்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

சினிமா

7 hours ago

க்ரைம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்