உரிமைக்குழு நோட்டீஸ் விவகாரத்தில், அடுத்து வழக்கு விசாரணை வரும் வரையில் திமுக எம்.எல்.ஏக்கள் 21 பேர் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம் என சட்டபேரவை செயலர் தரப்பு உத்தரவாதம் அளித்ததை அடுத்து வழக்கு இம்மாதம் 14 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி துரைசாமி முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மு.க.ஸ்டாலின் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதிட்டார். அவரது வாதத்தில் கடந்த ஜூலை 19ம் தேதி குட்காவை சட்டப்பேரவைக்குள் எடுத்து சென்றது அதன் விற்பனை தங்கு தடையின்றி இருப்பதை சுட்டிக்காட்டத்தான் என்று வாதிட்டார்.
குட்கா விவகாரத்தில் அமைச்சர், காவல் உயர் அதிகாரிகள் இடம்பெற்றுள்ள நிலையில் எப்படி காவல் நிலையத்தில் புகார் கொடுக்க முடியும். எனவே இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே குட்கா போன்ற புகையிலையால் ஏற்படும் புற்று நோயிலிருந்து பல தரப்பட்ட மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்கவும், இந்த பொருட்களை தடைசெய்ய வேண்டும் என்ற நோக்கிலும், மக்களின் பார்வைக்கு கொண்டு வரும் பொருட்டே எதிர்கட்சி தலைவர் உட்பட சட்டமன்ற உறுப்பினர்கள் குட்காவை அவைக்கு எடுத்து சென்று காட்டியுள்ளனர்.
குட்கா விற்பனை தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனவே இதை தடுக்க வேண்டும் என்பது எனது உரிமையல்ல , அது என் கடமை என்றும், தமிழகத்தில் அனைத்து கடைகளில் எளிதாக குட்கா உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கிடைக்கிறது என்பதை வெளிக்காட்டவே ஸ்டாலின் குட்காவை அவைக்கு எடுத்து சென்று காட்டியுள்ளார் என வாதிட்டார்.
மேலும் தற்போதைய நடவடிக்கை மக்கள் பிரதிநிதிகளின் பேச்சுரிமை பறிக்கும் செயல் என குற்றஞ்சாட்டிய அவர், குட்கா விவகாரம் குறித்து பேச அனுமதி பெற்ற பின்னரே பேசப்பட்டது, அவை நடவடிக்கையை நடத்த விடாமல் தி.மு.க.வினர் இடையூறு செய்யவில்லை என அவர் வாதிட்டார்.
மேலும் தினகரன் அணி முதல்வருக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றதால் சபாநாயகர் இந்த நடவடிக்கைகள் எடுத்துள்ளார் எனவும், குட்கா பொருட்கள் கொண்டுவருவதை தடுக்க சபை விதிகள் ஏதும் இல்லை.
எனவே விதிகள் இல்லாதபோது அதை மீறியதாகக் கூறுவது எப்படி? அதனால் சபையின் மாண்பை குறைத்ததாக கூறுவதும் தவறு என்று வாதிட்டார் . மேலும் மாண்பை மீறாத நிலையில் உரிமைக்குழு நோட்டீஸுக்கு தாங்கள் பதிலளிக்கப் போவதில்லை எனத் தெரிவித்தார்.
இதனைடுத்து, உரிமைக்குழு மற்றும் பேரவை செயலாளர் தரப்பில் ஆஜரான, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா என வாதம் செய்ய வேண்டியுள்ளது, எனவே வழக்கை செப்டம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் எனக் கோரினார்.
அதே சமயம், முதலில் உரிமைக்குழு அனுப்பிய நோட்டீசுக்கு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் விளக்கமளிக்கட்டும் எனத் தெரிவித்தார். மேலும் சபை நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று தெரிவித்த அவர், சபை எடுக்கும் முடிவுகளை எதிர்த்து வேண்டுமானால் நீதிமன்றத்தை நடலாம், ஆனால் தற்போது சபை எந்த முடிவையும் எடுக்காத நிலையில், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறினார்.
மேலும் வழக்கு அடுத்த விசாரணைக்கு வரும் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உரிமைக்குழுவுக்கு அறிவுறுத்துவதாகவும் விஜய் நாராயண் கூறினார்.
இதனையடுத்து நீதிபதி துரைசாமி, இந்த நீதிமன்றம் அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை உரிமைக்குழு நோட்டீஸ் தொடர்பாக தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உரிமைக்குழுவுக்கு உத்தரவாதத்தை பதிவு செய்ய உத்தரவிட்டார்.
மேலும் இந்த வழக்கு மீதான விசாரணையை செப்டம்பர் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
முந்தைய செய்தி:
சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது சபைக்குள் தடைசெய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை எடுத்து சென்றதால் சபையின் மாண்பிற்கு களங்கம் ஏற்பட்டதாக உரிமைமீறல் பிரச்சனை எழுந்தது.
இது குறித்து விசாரணை நடத்திய உரிமைக்குழு சட்டபேரவை எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் 21 பேரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த நோட்டீஸ் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும், கருத்துரிமை , பேச்சுரிமைக்கு எதிரானது என்றும், பெரும்பான்மையில்லாத அரசு ஆட்சியை தக்க வைக்க தங்களை நீக்க குறுக்கு வழியில் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டி, இந்த நோட்டீசை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உட்பட 21 தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கின் மீதான விசாரணையில் பேரவை செயலர் தரப்பில் அளித்த உத்தரவாதத்தை அடுத்து வழக்கு செப்.14 க்கு ஒத்திவைக்கப்பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
சினிமா
39 mins ago
சினிமா
56 mins ago
க்ரைம்
50 mins ago
தமிழகம்
41 mins ago
சினிமா
1 hour ago
இந்தியா
25 mins ago
இணைப்பிதழ்கள்
8 hours ago
இணைப்பிதழ்கள்
8 hours ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago