வாகன ஓட்டிகள் சோதனையில் சிக்கும்போது மது அருந்தவில்லை என கூறினால் நிரூபிக்க மேலும் 3 வாய்ப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: மது போதையில் வாகனம் ஓட்டுபவர் மீது வழக்குப் பதிந்து அபராதம் விதிக்கப்படுகிறது அப்படி,அவர் தான் மது அருந்த வில்லை என போலீஸாரிடம் முறையிட்டால் அதை நிரூபிக்க மேலும் 3 வாய்ப்புகளை போக்குவரத்து போலீஸார் வழங்கி உள்ளனர்.

சென்னை தேனாம்பேட்டை போலீஸார் கடந்த 27-ம் தேதி இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். டி.டி.கே சாலை அருகே தீபக் என்ற இளைஞர் காரில் நண்பர்களுடன் வந்து கொண்டிருந்தார். அப்போது, காரை மடக்கிய போலீஸார், காரை ஓட்டிவந்த தீபக்கிடம் மது அருந்தி கார் ஓட்டினாரா என்பதை ‘பிரீத் அனலைசர்’ என்கிற சுவாச சோதனை கருவி மூலம் சோதனை செய்தனர்.

அதில், அவர் மது அருந்தி (45 சதவீதம்) இருந்ததாக காண்பித்தது. இதனையடுத்து தீபக்குக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு அதற்கான ரசீதை கொடுத்தனர். ஆத்திரம் அடைந்த அவர், ரசீதை வாங்க மறுத்து, ‘தனக்கு மது குடிக்கும் பழக்கம் கிடையாது என வாதிட்டார். நீண்ட விவாதத்துக்குப் பிறகு அவருக்கு மீண்டும் சோதனை நடத்தியதில் அவர் மது அருந்தவில்லை என தெரியவந்தது.

இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மதுப்பழக்கம் இல்லாதவரை குடிகாரனாக கருவி காட்டியது எப்படி என்று பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுந்தது.

இதுகுறித்து சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில் குமார் சி.சரத்கர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுபோதையில் வாகனம் ஓட்டி வருவது பெரிய குற்றமாகும். இதைஏற்றுக் கொள்ள முடியாது.

குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும் அல்ல சாலையில் செல்வோருக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனாலேயே குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

போக்குவரத்து போலீஸாரின் இந்த நடவடிக்கை மூலம் 2021-22-ல்13 சதவீத விபத்து உயிரிழப்பு குறைந்துள்ளது. இந்த ஆண்டுஅதைவிட அதிகளவு குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது எடுக்கப்படும் கடும் நடவடிக்கைதான். இதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்தான் மது அருந்தாமல் வாகனம் ஓட்டி வந்த நபருக்கு பிரீத் அனலைசர் கருவி மது அருந்தியதாக காட்டியுள்ளது. இது சம்பந்தப்பட்ட கருவியின் தொழில்நுட்ப கோளாறு. இது மிகவும் அரிது. இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஒரு விவகாரத்தை மட்டும் வைத்துக் கொண்டு மொத்த பிரீத் அனலைசர் இயந்திரங்களை குறை கூறுவது, போலீஸார் மீதும் குற்றம் சுமத்துவது தவறு.

இனி வரும் காலங்களில் போலீஸார் சோதனையில் ஈடுபடும்போது போதையில் சிக்குபவர்கள், நாங்கள் மது அருந்தவில்லை என ஆட்சேபனை தெரிவித்தால் அவர்கள் மேலும் 2 முறை பிரீத் அனலைசர் கருவியில் ஊதச் சொல்லுவோம். அப்போதும் மது அருந்தியதாக கருவி காட்டி சம்பந்தப்பட்டவர் மது அருந்தவில்லை என குறிப்பிட்டால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ரத்த பரிசோதனை செய்து அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்படும்.

கருவியின் மீது சந்தேகம் வேண்டாம். இதற்காகவே புதிய நடைமுறையை அறிமுகம் செய்துள்ளோம். போக்குவரத்து போலீஸார் தவறு செய்தால் பொதுமக்கள் அதுகுறித்தும் புகார் தெரிவிக்கலாம். பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பேட்டியின்போது போக்குவரத்து காவல் இணை ஆணையர் மயில்வாகனன் உடனிருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

சுற்றுச்சூழல்

39 mins ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்