வேங்கைவயல் சம்பவம்: ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் பஞ்சாயத்திற்கு உட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவுகள் கலக்கப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக வெள்ளனூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வன்கொடுமைத் தடுப்பு சட்டம், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில், திருவள்ளூர் மாவட்டம், வேப்பன்பட்டுவைச் சேர்ந்த ராஜ்கமல் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், "நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் கடந்தும் தீண்டாமை கொடுமைகள் இன்னும் அரங்கேறி வருகிறது. அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள சமூகநீதி என்பது இன்னமும் தொலைதூர கனவாகவே உள்ளது. பட்டியலின மக்கள் இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்பட்டு வருகின்றனர்.

இந்த வழக்கில் புதுக்கோட்டை சிபிசிஐடி போலீசார் பெயரளவில் மட்டுமே விசாரணை நடத்தி வருகின்றனர். தீவிர விசாரணை ஏதும் நடத்தவில்லை. வெறும் கண்துடைப்புக்காக ஒரு சிலர் மட்டும் விசாரிக்கப்பட்டுள்ளனர். உண்மை குற்றவாளிகளை சட்டத்தின் முன்நிறுத்தும் எண்ணம் ஏதும் இல்லை. இந்தச் சம்பவம் தொடர்பாக புகார் அளித்து 90 நாட்கள் கடந்த நிலையிலும், வழக்கு தொடர்பாக ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை. முறையாக விசாரிக்கப்படவும் இல்லை. எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்" என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், சிபிசிஐடி புலன் விசாரணை அதிகாரியின் அறிக்கையை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், வழக்கின் புலன் விசாரணை நியாயமாக நடந்து வருகிறது. உயரதிகாரிகள் விசாரணையை கண்காணித்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, சம்பவம் நடந்து 90 நாட்களுக்கு மேலாகியும் வழக்கு விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சத்தியநாராயணன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைத்து உத்தரவிட்டனர்.

சம்பவம் குறித்து விசாரித்து இரு மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்ட நீதிபதிகள், ஒரு நபர் ஆணையத்துக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

41 mins ago

ஜோதிடம்

46 mins ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்