சென்னை: சென்னை மாநகரின் முக்கிய பொழுதுபோக்கு மையமாக, அதிக அளவில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடமாக விளங்குவது மெரினா கடற்கரை. இங்கு செயல்படும் 1,600-க்கும் மேற்பட்ட கடைகள் ஒழுங்கற்று இருந்ததாலும், சுத்தம், சுகாதாரத்தை முறையாக கடைபிடிக்காததாலும், மெரினா கடற்கரை பொலிவின்றி, சுகாதார சீர்கேட்டுடன் காணப்பட்டது. குற்றச் செயல்களில் ஈடுபடுவோரின் மறைவிடமாகவும் இருந்தது. பெரும்பாலும் அப்பகுதி மீனவர்களே இக்கடைகளை நடத்தி வந்தனர்.
இந்த கடைகளை முறைப்படுத்தி, மெரினாவில் கடைகள் இயங்குவதற்கான விதிகளை வகுக்க மாநகராட்சி நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, கடற்கரையை அழகுபடுத்தும் நோக்கில், தேர்ந்தெடுக்கப்பட்ட 900 வியாபாரிகளுக்கு ஸ்மார்ட் கடைகளை இலவசமாக வழங்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது. அங்குஏற்கெனவே கடை வைத்திருப்போருக்கு 540 கடைகள், பிற பகுதிகளை சேர்ந்த வியாபாரிகளுக்கு 360 கடைகளை ஒதுக்க முடிவு செய்யப்பட்டு, கடந்த 2020 டிசம்பரில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்த நிலையில், 3,200 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. 2021 ஜனவரியில் நீதிபதிமுன்னிலையில் குலுக்கல் நடத்தப்பட்டு, 900 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஒதுக்கீடு ஆணையும் வழங்கப்பட்டது. இவர்களுக்கு வழங்குவதற்காக உலோகத்தால் ஆன, உறுதியான, தரமான 900 ஸ்மார்ட் கடைகளை தலா சுமார் ரூ.1.50 லட்சம் விலையில் மாநகராட்சி வாங்கியது.
இந்த சூழலில், மெரினாவில் ஏற்கெனவே கடை வைத்திருக்கும் 1,600 பேரும் தொடர்ந்து கடை வைக்க அனுமதிக்க கோரியும், மீனவர் அல்லாதோர் கடை வைக்க எதிர்ப்பு தெரிவித்தும், ஒதுக்கீடு ஆணை பெற்றவர்கள் இன்னும் ஸ்மார்ட் கடைகளை வாங்காமல் உள்ளனர். இதனால் ஸ்மார்ட் கடைகள் பழுதாகி வருகின்றன.
இந்நிலையில், இவற்றை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் சுமார் 600 கடைக்காரர்கள் உள்ளனர். அந்த கடற்கரையின் கொள்திறன் 340 என ஏற்கெனவே வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே, பயனாளிகளை தேர்வு செய்து, ஏற்கெனவே வாங்கிய ஸ்மார்ட் கடைகளை, அவர்களுக்கு இலவசமாக வழங்க உள்ளோம்.
குறைந்த அளவில் பராமரிப்பு கட்டணம் மட்டும் வசூலிக்கப்படும். மற்ற கடைகள் இதர மாநகராட்சிகளுக்கு விற்கப்படும்.எலியட்ஸ்கடற்கரையில் கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு வியாபாரிகள் கோரியுள்ளனர். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
ஆலோசனைக் கூட்டம்: இது தொடர்பாக நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், முதலில் அடையாளம் காணப்பட்ட 365 பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குவது, உணவு வகைகளை விற்போருக்கு முன்னுரிமை அளித்து கடைகளை வழங்குவது, கடை அமைவிடங்களை அடையாளம் காண்பது, சச்சரவு இல்லாமல் அமைதியான முறையில் கடைகளை ஒதுக்கீடு செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.
- ச.கார்த்திகேயன்
முக்கிய செய்திகள்
உலகம்
18 mins ago
தமிழகம்
20 mins ago
சினிமா
31 mins ago
இந்தியா
28 mins ago
இந்தியா
37 mins ago
சினிமா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
வணிகம்
2 hours ago
சினிமா
2 hours ago