தகனம் தவிர்த்து ஜெ. உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது ஏன்?

By ரம்யா கண்ணன்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல், அவர் பின்பற்றிய நம்பிக்கையின்படி தகனம் செய்யப்படாமல் நல்லடக்கம் செய்யப்பட்டதன் காரணம் என்ன? - இந்தக் கேள்வி மாநிலம் முழுவதும் பரவியுள்ளது. அதற்கான சில விளக்கங்களும் முளைத்துள்ளன.

இறுதி ஊர்வலத்துக்கு முன் ஜெயலலிதா உடல் தகனம் செய்யப்படும் என்றே நம்பப்பட்டது. ஆனால், எம்ஜிஆருக்கு பக்கத்தில்தான் நல்லடக்கம் செய்யப்படவேண்டும் என ஜெயலலிதா விரும்பியதால், அவ்வாறு செய்யப்பட்டது என்பது பலர் கூறும் காரணமாக இருக்கிறது.

பல தருணங்களில் எம்ஜிஆர் தான், வாழ்விலும் அரசியலிலும் தனது முன்னோடியாக இருந்ததாக ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதனால் தனது கடைசி உறைவிடத்தை அவரது உறைவிடத்துக்குப் பக்கத்தில் இருக்க வேண்டும் என விரும்பியது இயற்கையே.

"பதவியில் இருக்கும்போதே மறைந்த மூன்றாவது முதல்வர் அம்மா. அதனால்தான் அண்ணா, எம்ஜிஆர் போல அவரும் நல்லடக்கம் செய்யப்பட்டார்" என்றார் மூத்த அதிமுக நிர்வாகி ஒருவர்.

நகர கட்டமைப்பு திட்டத்தில் ஈடுபட்டுள்ள சிலர் கூறும்போது, கரையோர ஒழுங்கமைப்பு விதிகளின் காரணமாக இப்படி நடந்திருக்கலாம் என்கின்றனர். நினைவு மண்டபம் / சமாதி போன்ற பெரிய கட்டமைப்புகளை கடற்கரைக்கு அருகில் கட்டமுடியாது. விதிகள் அதற்கு அனுமதிக்காது என்றனர்.

அதேவேளையில், ஏற்கெனவே இருக்கும் சமாதிக்கு அருகில் தகனம் செய்யப்பட்டிருந்தால், அங்கிருக்கும் பளிங்கு வேலைப்பாடுகள் அதனால் பாதிக்கப்பட்டிருக்கும். மாசும் ஏற்பட்டிருக்கும்.

பெசன்ட் நகர் அல்லது மைலாப்பூரில் இருக்கும் மின் மயானத்தில் தகனம் செய்தபின் அந்த அஸ்தியை மீண்டும் எடுத்து வருவது மிகப் பெரிய காரியமாக இருந்திருக்கும். மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தியிருக்க முடியாது என சென்னை மாநகராட்சி பொறியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

நகர திட்டமிடல் நிபுணர் மற்றும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான எம்.ஜி.தேவசகாயம் கூறும்போது, ''முதல்வரின் நல்லடக்கத்தால் எந்தக் கரையோர ஒழுங்கமைப்பு விதிகளும் மீறப்படவில்லை. புதிதாக எதையாவது கட்டியிருந்தால் மட்டுமே பிரச்சினை உருவாகியிருக்கும். அப்படி எதுவும் கட்டப்படவில்லையே'' என்றார் அவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

26 mins ago

இந்தியா

34 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

3 hours ago

மேலும்